;
Athirady Tamil News

60-ல் ஒருவருக்கு எச்ஐவி! ஃபிஜியில் அவசரநிலை பிரகடனம்!

0

பசிபிக் மண்டலத்தின் சிறிய நாடான ஃபிஜியில் எச்.ஐ.வி. பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தேசிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் எச்.ஐ.வி. வைரஸால் ஏற்படும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், பத்து லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகையைக் கொண்ட ஃபிஜியில் 60 பேரில் ஒருவருக்கு கண்டறியப்பட்டிருப்பது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

வெண்மணல் கடற்கரைகள் மற்றும் செழிப்பான பவளப்பாறைகளுக்குப் பெயர் பெற்ற சுற்றுலாத் தலமான ஃபிஜி, முதல்முறையாக கடந்த 2025 ஜனவரியில் எச்.ஐ.வி. பரவல் குறித்து அறிவித்தது.

5 ஆண்டுகளுக்கு முன்னதாக 170 பேரில் ஒருவருக்கு எச்.ஐ.வி. வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது 60 பேரில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எச்.ஐ.வி. வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக தேசிய அவசர நிலையை அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் அட்டோனியோ லாலாபாலவு செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

மேலும், ஃபிஜியில் பரவும் எச்.ஐ.வி. தொடர்பாக ஆய்வு செய்யும் ‘ஃபிஜி குழந்தைகளை காப்போம்’ என்ற அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சமீபத்தில் இரண்டு மாதக் குழந்தைக்கு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், கடந்த ஆண்டில் மட்டும் 59 குழந்தைகளுக்கு தாயிடமிருந்து வைரஸ் பரவியதாகவும் தெரிவித்துள்ளது.

நரம்பு வழியாக மெத்தாம்பேட்டமின் போதைப்பொருளை ஊசி மூலம் செலுத்திக் கொள்ளும் பழக்கம் காரணமாகவே எச்.ஐ.வி. வைரஸ் அதிகரிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

அமெரிக்கக் கண்டங்களிலிருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஆசியாவின் சில பகுதிகளுக்குக் கடத்தப்படும் போதைப்பொருள்களுக்கான முக்கியப் பரிமாற்ற மையமாக ஃபிஜி தீவுகள் உருவெடுத்ததே இதற்குக் காரணமாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.