;
Athirady Tamil News

காலங்கடந்த ஒற்றுமையின் பயன்?

0

லக்ஸ்மன்

நாட்டின் தென் பகுதியிலும், வடக்கு கிழக்கிலும் காலங்கடந்த ஒற்றுமை குறித்த விவாதங்கள் இப்போது பிரபலமாகப் பேசப்படுபவையாக இருக்கின்றன. இவை பயனுடையவைதானா?
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களின் ஈகோ போர்களைத் தாண்டி, கொழும்பு மேயர் பதவிக்காக ஒன்றிணைவது பற்றிய செய்தி வந்தபோது, இரு கட்சிகளின் ஆதரவாளர்களும் அதை ‘மிக மிகக் கால தாமதமானது” என்றுதான் வரவேற்றனர்.

நாட்டையே ஆட்சி செய்யும் வாய்ப்பிருந்த போதிலும் அதனை நழுவவிட்டு தற்போது கொழும்பு மேயர் பதவியைத் தக்கவைப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இணைந்து போராடுகின்றன.

இக் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றால், சஜித்தும் ரணிலும் ஒற்றுமையின் சக்தியை உணர்ந்து, வெறுப்பின் கோடரியை என்றென்றும் புதைக்க வேண்டும் என்று கருத்துகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இது போன்றதொரு நிகழ்வு கடந்த செப்டெம்பரில் நடைபெற்றிருந்தால் வேறு வகையான நாடு இருந்திருக்கும் என்பதுதான் அதற்குக் காரணம்.

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற அதிகாரங்கள் ஜே.வி.பி. கைகளில் இருப்பதனால், உள்ளூராட்சித் தேர்தல்களில் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுக்கொள்ளவே ஜே.வி.பி. தீவிரமாக முயன்றது. மாநகர சபைகள் முதல் பிரதேச சபைகள் வரை முழுவதையும் வெற்றிகொள்வோம் என்ற நம்பிக்கையும் இருந்தது. அதனை வைத்தே அவர்கள் பெருமையும் பேசிக் கொண்டனர்.

அதனடிப்படையில் தான், 339 சபாக்களையும் ஒரே நேரத்தில் கைப்பற்றுவோம். ஆதிக ஆசனங்களுடன் எதிர்க்கட்சிகளில் ஏதேனும் ஒரு சபையையேனும் வெற்றிகொண்டால், அந்தப் பிரதேசத்தின் அபிவிருத்திக்கு அரசாங்க நிதியிலிருந்து ஒரு சதம் கூட வழங்கப்படாது.

“எதிர்க்கட்சிகள் அனைத்தும் முரடர்கள், நேர்மையற்றவர்கள் மற்றும் ஊழல் நிறைந்தவர்கள். ஊழல்வாதிகளுக்கு பொதுப் பணத்தைக் கொடுக்க முடியாது. ஆனால், எங்களது சபைகளுக்கு, நான் கண்ணிமைக்காமல் கொடுப்பேன்” என்று ஜனாதிபதி அறிவித்தார். அது அவரது எச்சரிக்கையாகவே இருந்தது.

ஆனால், அரசியல் சொல்லாடல்கள் இருந்தபோதிலும், நம்பிக்கையான ஆரவாரம் மற்றும் தற்பெருமை இருந்தபோதிலும், இறுதித் தேர்தல் முடிவுகள், ஆறு மாதங்களுக்கு முன்பு ஜே.வி.பியை நோக்கி வீசிய 6.8 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட அலை 2.3 மில்லியனாகக் குறைந்து. மிகக் குறுகிய காலத்திற்குள் ஜே.வி.பியின் ஆதரவில் ஏற்பட்ட இந்த வியத்தகு சரிவு, அதன் தலைவர்களுக்கு அவர்களின் ஆதரவு வேகமாகக் குறையத் தொடங்கியிருப்பதை எச்சரித்திருக்க வேண்டும்.

ஆனால், வேறு யார் வெற்றி பெற்றாலும், இந்த நாட்டை ஆளத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தாங்கள்தான் என்று பொதுமக்களுக்கு அவர்கள் சித்திரித்த மாயையை அது உடைத்திருக்கிறது. 51 சதவீத வாக்குகளைப் பெறாவிட்டாலும், அதிக எண்ணிக்கையிலான இடங்களை தனித்து வெல்லும் கட்சியே உள்ளூராட்சி சபைகளை வெல்லும் என்ற கதையை ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா கூறியிருந்தார்.

அதே நேரத்தில், மக்கள் தங்களுக்கு வழங்கிய ஆணையைத் திருட வேண்டாம் என்று எதிர்க்கட்சிக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எச்சரிக்கையும் விடுத்திருந்தார். ஆனால், நடைபெற்றதோ வேறாகத் தான் இருந்தது. நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் நாட்டிலுள்ள 339 உள்ளூராட்சி சபைகளில் ஜே.வி.பி. 115 நேரடி வெற்றிகளைப் பெற்றது, இது ஒரு கணக்கிடல் பிழையே.

இது ஒருபுறமிருக்க, கொழும்பு மாநகர சபையில் யார் ஆட்சியைக் கைப்பற்றுவது என்பது பெரும் பரபரப்பாக எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகின்ற விடயமாக இருக்கிறது. கொழும்பு மாநகர சபையின் 117 ஆசனங்களில், ஜே.வி.பிக்கு 48, ஐ.ம.சக்கு 29, ஐ.தே.கவுக்கு 19, என்ற கணக்கிலேயே காணப்படுகிறது. இதில் எந்தத் தரப்புக்கு ஆதரவு அதிகமாக இருக்கும் என்பது இறுதி நாள் வரையில் தெரியாத ஒன்றே. இதே போன்றே, ஏனைய பல சபைகளிலும் தீர்மானங்களின்றி பேச்சுக்களும் பேரம் பேசல்களும் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

தெற்கில் இவ்வாறு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்புக்காக நடைபெற்று வருகின்றன குழப்பங்களுக்கு மத்தியில் வடக்கு கிழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்ப் பிரதேசங்கள் அனைத்தையும் கைப்பற்றுவோம் தனித்து ஆட்சியமைப்போம் என்கிற கோதாவிலேயே இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளூராட்சித் தேர்தலில் செயற்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தனித்து செயற்படுவதாக முடிவை அறிவிக்கும் போதும் அவர்கள் உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியமைப்பினையே காரணமாக சொல்லியிருந்தார்கள். ஆனாலரல் இப்போது நடைபெறுபவையெல்லாம் மிகவும் கேவலமானவைகளாக இருப்பது தமிழ்த் தேசிய அரசியலைக் கொச்சைப்படுத்தும் செயற்பாடுகளாக இருப்பது கவலைக்குரியவைகளாகப் பார்க்கப்படுகின்றன.

அதற்கு காரணம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் கடந்த வாரத்தில் ஈ.பி.டி.பியின். செயலாளர் நாயகத்தை யாழ்ப்பாணம் சிறிதர் தியேட்டரில் சந்தித்ததுதான். அதற்கு பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கொடுக்கும் விளக்கம் இன்னமும் வினோதமானதாக இருக்கிறது.

தங்களது கட்சியின் உள்ளூராட்சித் சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட அதிக ஆசனங்களைக் கொண்ட கட்சிக்கு ஆட்சியமைக்க ஆதரவு வழங்க வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், பதில் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்ததாக அவர் கூறியிருக்கிறார்.

உள்ளூராட்சித் தேர்தல் நிறைவடைந்ததனைத் தொடர்ந்து, ஆட்சியமைப்பு குறித்து நடைபெற்று வருகின்ற கலந்துரையாடல்கள் வார்த்தை ஜாலங்களால் மறைக்கப்படுவதையே காட்டுகின்றன. இது காலங்காலமாக இலங்கை தமிழரசுக் கட்சியால் தமிழர் அரசியலில் செய்யப்படுவதைப் போன்றே தொடர்கின்றன என்பதுதான் உண்மை.

தேர்தல் முடிந்ததையடுத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி என்பன தொடர்ச்சியாக சொல்லி வருவதைப் போலவே தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இருந்தாலும், உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியமைப்பு விடயத்தில் விட்டுக் கொடுப்புகளுடன் நகரலாம் என்றும் கூறினர். ஆனால், தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடானது, அதிக ஆசனம் பெற்ற கட்சி, மேயர், தவிசாளர், உப தவிசாளர் பதவிகள் குறித்ததாகவே இருந்து வந்திருக்கிறன. இதில் ஒரு பகுதிதான் டக்ளஸ் தேவானந்தாவை சிறிதர் தியேட்டரில் சீ.வி.கே.சிவஞானம் சந்தித்ததாகும்.

மரத்தால் விழுந்தாலும் மீசையில் மண்ணொட்டாத வகையில் அனுசரிப்பது மிகவும் சிரமமானதே. தமிழ்த் தேசிய அரசியலில் விரோதிகள், துரோகிகன் நிலைப்பாடுகள் இருந்து கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது இணைந்திருந்த கட்சிகளைப் புலிகளின் முடிவுக்குப் பின்னர் வெளியேற்றும் சூழ்ச்சியைக் கையாண்ட இலங்கைத் தமிழரசுக்கட்சி கூட்டமைப்பு உருவாக்கத்திலிருந்து இருந்த கட்சியான ரெலோவை வெளியேற்ற முடியாமல் போகவே தாமாக வெளியேறி இறுதியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இல்லையென்றாக்கியிருந்தது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அவர்கள் இயங்குவதற்கும் தடை ஏற்படுத்தினர்.

அதற்கு அவர்கள் சொல்லி வருகின்ற காரணங்கள் பல இருக்கின்றன. ஆனால், அதில் தனிப்பட்ட கோபதாபங்கள், வெறுப்புகள், ஈகோக்களும் இருப்பது வெளிப்படையே.
இவ்வாறான நிலையில்தான், வாசனைத் திரவியம் போன்று ஈ.பி.டிபியை பயன்படுத்திக் கொள்வதற்காக சிறிதர் தியேட்டருக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சென்றிருக்கிறார். இது மற்றொரு வகையில் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மிரட்டலும் கூட என்பது சிலருக்கு புரியாதிருப்பது வினோதமே.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி ஆகியன முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு நாங்கள் மசியமாட்டோம். நீங்கள் ஆட்சியமைக்க ஒத்துழைக்காவிட்டால் இவ்வாறும் எங்களிடம் வழிகள் இருக்கின்றன என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி மிரட்டல் விடுத்திருக்கும் நிலையில் தமிழர் பிரதேசங்களிலுள்ள சபைகளின் நிலைமை எவ்வாறிருக்கும் என்பது சற்று சிந்திக்க வேண்டியதே.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குலையாமலிருந்திருந்தால், வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு பெருகியிருக்காது என்பதுபோல், தெற்கில் ஐக்கிய மக்கள் சக்தி – ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்திருந்தால் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கே வந்திருக்காது. இது யார் செய்த பிழை.

பெரும்பான்மையில்லாத ஜனாதிபதி அதிகாரம் தெற்கிலும், மக்களின் வெறுப்பினாலேயே ஒதுக்கப்படுகின்ற அரசியல் வடக்கு கிழக்கிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், தெற்கில் நடைபெற்று வருகின்ற குழப்பம் ஒரு ஒற்றுமைக்குக் காலாக அமைந்திருந்தாலும் வடக்கு கிழக்கில் மேலும் மேலும் விரிசலுக்கே வழிவகுத்து வருகிறது என்பதுதான் முக்கியமானது.

இதற்கு யார் காரணம் என்பதனை தமிழ் மக்கள் புரிந்துகொள்ளாமலிருப்பதுதான் இதில் வினோதம்.
ஒற்றுமையின் சக்தியை உணர்ந்துகொள்ளாதவர்கள் இருக்கின்றார்களானால் அவர்களுக்கு அதனைப் புரிய வைப்பது மக்களாகவே இருக்கவேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.