ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்தாமல் இன்னும் 4 கோடி பேர் உள்ளனர்- மத்திய அரசு தகவல்..!!
![](https://www.athirady.com/wp-content/uploads/2022/07/1734463-corona-vacci123.jpg)
கொரோனா தொற்று தீவிரமடைந்ததை அடுத்து நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு தடுப்பூசி மையங்களை ஏற்பாடு செய்தன. அரசு தடுப்பூசி மையங்களில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை மருந்துகளை வழங்குவதற்கான சிறப்பு 75 நாள் மையம் கடந்த 15-ம் தேதி முதல் தொடங்கியது. இந்நிலையில், ஜூலை 18-ம் தேதி நிலவரப்படி தகுதியான 4 கோடி பயனாளிகள் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட செலுத்திக்கொள்ளவில்லை என்று சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவின் பவார் மக்களவையில் தெரிவித்துள்ளார். ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்திக்கொள்ளதவர்களின் எண்ணிக்கை மற்றும் சதவீதம் குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார். மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பயனாளிகளுக்கும் இந்த ஆண்டு மார்ச் 16-ம் தேதி முதல் இலவச தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. 18- 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஏப்ரல் 10-ம் தேதி முதல் தனியார் மையங்களிலும் செலுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், இந்தியாவில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களில் 98 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸையாவது பெற்றுள்ளனர். அதே நேரத்தில் 90 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.