;
Athirady Tamil News

காரில் ரூ.50 லட்சத்துடன் பிடிபட்ட எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட செய்தது காங்கிரஸ்..!!

0

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சியின் ஹேமந்த் சோரன் முதல் மந்திரியாக செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே, மேற்குவங்காள மாநிலத்தின் ஹவுராவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு காரில் மிகப்பெரிய அளவில் பணம் கொண்டு செல்லப்படுவதாக அம்மாநில போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்திய போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் ராணிஹடி என்ற பகுதியில் வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தினர். அந்தக் காரில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்சஷப், நமன் பிக்சல் கொங்கரி ஆகிய 3 பேர் பயணித்தது தெரியவந்தது. காரின் பின்பகுதியில் போலீசார் சோதனை நடத்தியபோது இருக்கைக்கு பின்னே கட்டுகட்டாக பணம் இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பணத்தைக் கைப்பற்றிய போலீசார் ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் உள்பட காரில் பயணித்த 5 பேரை கைது செய்தனர். காரில் இருந்து மொத்தம் 50 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தப் பணம் யாரிடம் பெறப்பட்டது, எங்கு கொண்டு செல்லப்படுகிறது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மேற்குவங்காளத்தில் காரில் பணத்துடன் பிடிபட்ட 3 எம்.எல்.ஏ.க்களையும் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், ஜார்க்கண்டில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சித்து வருவதாகவும், இதற்காக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் பா.ஜ.க. மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.