;
Athirady Tamil News

சிறந்த தலைவர்களால் மட்டுமே நாட்டை வலுப்படுத்த முடியும்: ராகுல்காந்தி பேச்சு..!!

0

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் 150 நாள் பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் 7-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை வழங்கி தொடங்கி வைத்தார். குமரி மாவட்டத்தில் ராகுல்காந்தி 4 நாள் பாதயாத்திரையை முடித்துக்கொண்டு கேரளவுக்கு வந்தார்.

கேரளாவில் நேற்று முன்தினம் பாறசாலையில் இருந்து ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார். அவர் நெய்யாற்றின் கரை வழியாக இரவு 7 மணிக்கு நேமம் சந்திப்பில் நிறைவு செய்தார். அதைத்தொடர்ந்து 2-வது நாள் பாதயாத்திரையை நேமத்தில் நேற்று காலை 7 மணிக்கு ராகுல்காந்தி தொடங்கினார். அவருடன். எம்.பி.க்கள் கொடிக்குன்னில் சுரேஷ், சசிதரூர், முரளீதரன், அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் பாதயாத்திரை குழுவினர் நடந்து வந்தனர்.

தொண்டர்கள்
நேமத்தில் இருந்து வழிநெடுக கட்சி தொண்டர்கள், 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து வந்தனர். 7.30 மணி அளவில் பாதயாத்திரை கரமனை வந்து சேர்ந்தது. அங்குள்ள ஒரு ஓட்டலில் ராகுல் காந்தி டீ குடித்தார். பின்னர் ஓட்டல் உரிமையாளர் அய்யப்பன் மற்றும் ஊழியர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். கரமனை பகுதி மீனவ பெண்கள் ராகுல்காந்தியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் அங்கு இருந்து புறப்பட்ட ராகுல்காந்தியை சிறுவர், சிறுமிகள், இளம்பெண்கள், இளைஞர்கள் நேரில் சந்தித்து பேசுவதில் ஆர்வம் காட்டினார்கள். அவர்களுடன் ராகுல்காந்தி பேசி, புகைப்படம் எடுத்து கொண்டார். அதன்பிறகு ராகுல்காந்தியை விழிஞ்ஞத்தில் படகு கவிழ்ந்து இறந்த 4 மீனவர்களின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் சந்தித்தனர். அவர்களிடம் படகு விபத்து குறித்து ராகுல்காந்தி கேட்டறிந்து, ஆறுதல் கூறினார்.

ராகுல்காந்தியை முன்னாள் தடகள வீராங்கனை பத்மினி தாமஸ் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். வழிநெடுக சாலையின் இரு புறமும் நின்ற தொண்டர்கள், பொதுமக்களை பார்த்து ராகுல்காந்தி கையை அசைத்தபடி நடை பயணத்தை தொடர்ந்தார். பாளையம் பகுதியில் உள்ள ரத்த சாட்சி மண்டபத்துக்கு ராகுல் காந்தி வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். காலை 10 மணிக்கு பட்டம் புனித மேரி மேல்நிலை பள்ளியில் பாதயாத்திரையை ராகுல்காந்தி நிறைவு செய்தார்.

சிறிது நேரம் ஓய்வுக்கு பின் பகல் 1 மணிக்கு காந்தியவாதிகள், சமூக தலைவர்கள் உள்பட சிறப்பு அழைப்பாளர்களுடன் ராகுல் காந்தி மதிய உணவு அருந்தினார். பிற்பகல் 2 மணிக்கு ஜவகர் பால் மஞ்ச் நடத்திய ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்-சிறுமிகளுக்கு பரிசுகளை வழங்கினார். 3 மணிக்கு கண்ணு மூலை சட்டம்பி சாமியின் ஜன்ம பூமியில் தரிசனம் செய்தார்.

மாலை 4 மணிக்கு ராகுல்காந்தி பாதயாத்திரையை தொடர்ந்தார். இந்த பாதயாத்திரை கேசவதாசபுரம், வழியாக இரவு 7 மணிக்கு கழக் கூட்டத்தை அடைந்தது. அங்கு அல்சாஜ் கன்வென்சன் மையத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பாதயாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்தில், திருவனந்தபுரம் பத்தனம்திட்டை மாவட்டத்தை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டம் நிறைவடைந்ததும் ராகுல் காந்தி மற்றும் குழுவினர் அங்கேயே ஓய்வு எடுத்தனர். 3-வது நாள் பாதயாத்திரையை இன்று (செவ்வாய்க்கிழமை) கழக்கூட்டத்தில் இருந்து காலை 7 மணிக்கு ராகுல்காந்தி தொடங்க உள்ளார்.

முன்னதாக பட்டமில் உள்ள பட்டம் புனித மேரி மேல்நிலை பள்ளியில் ஓய்வெடுத்த போது ராகுல்காந்தி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது:-
வளரும் புதிய தலைமுறைக்கு போதிய கல்வியை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினாலே போதை பொருட்களுக்கு அடிமையாவதில் இருந்து அவர்களை விடுவிக்க முடியும். இந்திய ஒற்றுமை பாதயாத்திரை இளைய சமூகத்தை மையப்படுத்தி நடத்தப்படவில்லை. மாறாக நமது நாட்டில் அன்பு, சமாதானம், ஒருமைப்பாட்டை கொண்டு வர வேண்டும். சாதி, மத வேறுபாடுகளை களைய வேண்டும் என்பதே நோக்கம். நான் கேரள மக்கள் மீது அளவுக்கு அதிகமாக அன்பு வைத்து இருக்கிறேன்.

இங்குள்ள மக்களுக்கு அரசியல் ரீதியாக நல்ல புரிதல் உள்ளது. குழந்தைகள் பள்ளி பருவம் முதல் சிறப்பான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். அப்போது தான் சிறந்த தலைவர்களாக வர முடியும். சிறந்த தலைவர்களால் மட்டுமே நாட்டை வலுப்படுத்த முடியும். எனது எதிர்காலம் குறித்து இப்போது என்னால் கூற முடியாது. ஆனால் நல்ல தலைமை கிடைத்தால், நமது நாட்டை நல்ல முறையில் வளர்ச்சி பாதையில் வழி நடத்தமுடியும். மதசார்பற்ற ஒரு சமூகத்தை உருவாக்கவும் விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.