;
Athirady Tamil News

மேகாலயா, திரிபுரா மாநிலங்களுக்கு பிரதமர் மோடி நாளை பயணம்..!!

0

பிரதமர் நரேந்திர மோடி, நாளை மேகாலயா மற்றும் திரிபுரா மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதலில் மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் நாளை காலை நடைபெறும் வடகிழக்கு கவுன்சில் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். பின்னர் காலை 11.30 மணியளவில் ஷில்லாங்கில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர், பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும் அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், மற்றும் திரிபுரா மாநிலங்களை இணைக்கும் 6 சாலைத் திட்ட பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். ஷில்லாங் தொழில் நுட்ப பூங்காவின் 2ம் கட்டப் பணிகளுக்கும், துராவில் ஒருங்கிணைந்த மருத்துவமனை மற்றும் கன்வென்சன் மையத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் நிறைவடைந்த பணிகளை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். தொடர்ந்து திரிபுரா மாநிலம் அகர்தலாவிற்கு செல்லும் பிரதமர், பிற்பகல் 2.45 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அப்போது ரூ.4,350 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டுவதுடன், நிறைவடைந்தப் பணிகளை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ரூ.3,400 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளின் கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். அகர்தலா புறவழிச்சாலையை அகலப்படுத்தும் பணிகளை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.