;
Athirady Tamil News

அமெரிக்க நாடாளுமன்ற கலவரம்: டிரம்ப் மீது வழக்கு பதிவு!!

0

அமெரிக்காவில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 6-ந் தேதி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் அளிப்பதற்காக அந்த நாட்டு நாடாளுமன்றம் கூடியது. அப்போது தேர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

இந்த கலவரத்தில் 5 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயம் அடைந்தனர். இந்த சூழலில் நாடாளுமன்ற கலவரத்தின்போது பணியில் இருந்த பிரையன் சிக்னிக் என்கிற போலீஸ் அதிகாரி கலவரம் நடந்த மறுநாள் அதாவது ஜனவரி 7-ந் தேதி பக்கவாதம் ஏற்பட்டு உயிரிழந்தார். கலவரத்தில் பிரையன் சிக்னிக்குக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என டாக்டர்கள் கூறியபோதும், கலவரம் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற கலவரம் குறித்து விசாரணை நடத்தி வந்த நாடாளுமன்ற விசாரணை குழு கடந்த சில வாரங்களுக்கு முன்பு இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ததது. அதில் டிரம்ப் கலவரத்தை தூண்டியதாகவும், அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்தநிலையில் போலீஸ் அதிகாரி பிரையன் சிக்னிக் மரணத்துக்கு டிரம்ப் தான் காரணம் என கூறி அவர் மீது போலீஸ் அதிகாரியின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

வாஷிங்டன் நகர கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் டிரம்பிடம் இருந்து 10 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.82 கோடியே 63 லட்சம்) இழப்பீடு கோரப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.