;
Athirady Tamil News

விமானத்தில் சிறுநீர் கழித்த மற்றொரு சம்பவம்- ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்!!

0

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி வந்த ஏர் இந்தியா விமானத்தில் சங்கர் மிஷ்ரா என்ற தனியார் நிறுவன அதிகாரி, குடிபோதையில் சக பெண் பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, சங்கர் மிஷ்ரா மீது வழக்குபதிவு செய்யப்பட்டு கடந்த 7-ந்தேதி அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் அவர் 4 மாதங்கள் ஏர் இந்தியா விமானத்தில் பறக்க தடைவிதிக்கப்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஏர் இந்தியா விமானத்தில் மீண்டும் இதேபோல ஒரு சம்பவம் நிகழ்ந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஆண் பயணி ஒருவர் தனது அருகில் அமர்ந்திருந்த பெண் பயணி கழிவறைக்கு சென்றிருந்த நேரத்தில் அவரது இருக்கையில் இருந்த போர்வையில் சிறுநீர் கழித்தார்.

மேலும் அதே விமானத்தில் மற்றொரு ஆண் பயணி குடிபோதையில் கழிவறைக்குள் புகைப்பிடித்த சம்பவமும் நிகழ்ந்தது. இந்த சம்பவங்கள் தொடர்பாக ஏர் இந்தியாவின் பொறுப்பு கூறல் மேலாளருக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் ஏர் இந்தியா நிறுவனம் தனது பதிலை சமர்பித்தது. அதனை சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் பரிசீலனை செய்தது.

அதைத்தொடர்ந்து, பாரீஸ்-டெல்லி விமானத்தில் நடந்த இந்த 2 சம்பவங்கள் குறித்தும் முறைப்படி புகார் அளிக்கவில்லை என கூறி ஏர் இந்திய நிறுவனத்துக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் நேற்று ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது. முன்னதாக நியூயார்க்-டெல்லி விமானத்தில் ஆண் பயணி, சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் கடந்த 20-ந்தேதி ரூ.30 லட்சம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.