;
Athirady Tamil News

நீதியை நிலைநாட்டும் அமைப்பாக சிபிஐ இருந்து வருகிறது – பிரதமர் மோடி!!

0

கடந்த 1963-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சி.பி.ஐ. தொடங்கப்பட்டது. அதன் வைர விழா கொண்டாட்டம் டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. வைர விழா கொண்டாட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊழல் மேல் ஊழல் இருந்தது. பினாமி சொத்துகளுக்கு எதிராகவும் கறுப்பு பணத்திற்கு எதிராகவும் மிகப்பெரிய போரை தொடங்கினோம். ஊழல் மட்டுமில்லாமல் ஊழலுக்கான காரணங்களையும் ஒழிப்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டோம். நாட்டில் ஊழல் இல்லாமல் இருப்பது மிக முக்கியம்.

அதற்காக சிபிஐ அமைப்பு பாடுபட்டு வருகிறது. நீதியை நிலைநாட்டும் அமைப்பாக சிபிஐ இருந்து வருகிறது. நீங்கள் யாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறீர்களோ அவர்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்கள் என்பதை நான் அறிவேன். அவர்கள் பல ஆண்டுகளாக அரசில் ஒரு பகுதியாக உள்ளனர். இன்றும் அவர்கள் சில மாநிலங்களில் ஆட்சியில் உள்ளனர். ஆனால் நீங்கள் உங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும், எந்த ஊழல்வாதியும் தப்பிக்கக் கூடாது.

சிபிஐ சாதாரண குடிமகனுக்கு நம்பிக்கையையும் பலத்தையும் அளித்துள்ளது. நீதிக்கான முத்திரையாக சிபிஐ உருவெடுத்துள்ளதால் சிபிஐ விசாரணை கோரி மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். வங்கி மோசடிகள் முதல் வனவிலங்குகள் தொடர்பான மோசடிகள் வரை சிபிஐயின் பணியின் நோக்கம் பன்மடங்கு அதிகரித்துள்ளது, ஆனால் சிபிஐயின் முக்கிய பொறுப்பு நாட்டை ஊழலற்றதாக மாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.