;
Athirady Tamil News

இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாற்றுவேன்!!

0

அடுத்த தசாப்தத்தில் இலங்கைக்கு பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் துறையாக சுற்றுலாத்துறை மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாற்ற, ஏற்கனவே திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் தனிநபர் வருமானத்தை அதிகரிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்திய சுற்றுலா சம்மேளன நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எல்லைகளுக்கு அப்பால் பிம்ஸ்டெக் (BIMSTEC) வலயத்தை அபிவிருத்தியடைந்த சுற்றுலாப் பிரதேசமாக மேம்படுத்த, அனைத்து பிம்ஸ்டெக் நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

இலங்கை பாதுகாப்பான மற்றும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம் என்பதை உலகுக்கு அறிமுகப்படுத்த நடத்தப்படும் இந்த மாநாட்டில், இந்திய சுற்றுலாப் பயண முகவர் சம்மேளத்தைச் சேர்ந்த சுமார் 500 பேர் கலந்துகொண்டுள்ளன.

இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“இந்த மாநாட்டை இலங்கையில் நடத்துவதன் மூலம் திருமதி. ஜோதி எங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி கூற வேண்டும். புதிய திட்டங்களின் ஊடாக இலங்கையை மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாற்றுவேன் என நான் உறுதியளிக்கிறேன். அதற்காக எமது சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்.

இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்கும் வகையில் கடனை மறுசீரமைக்க வேண்டும். சுற்றுலாத்துறை என்பது கடன் அல்லாத நிதியை திரட்டுவதற்கான ஒரு வழியாகும். எனவே அதை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.

ஒரு சுற்றுலா பயணி ஒரு இரவுக்கு குறைந்தபட்சம் 1000 டொலர்களை செலவழிக்கும் ஒரு கவர்ச்சிகரமான திட்டத்தை உருவாக்க வேண்டும். தெற்காசிய நாடுகளில் மிகச்சிறிய மாலைத்தீவிலிருந்து சுற்றுலா பற்றி நாம் கற்றுக்கொள்ளக்கூடிய விடயங்கள் பல உள்ளன. நுவரெலியாவை கொல்ப் விளையாட்டின் மையமாக மாற்றுவதற்கு மேலும் 7 கொல்ப் மைதானங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம். பெரிய சுற்றுலா விடுதிகளை உருவாக்க வேண்டும். தெதுவ பிரதேசத்தை அண்மித்து, நீர்த்தேக்கத்திற்கு அண்டிய அண்டிய 1000 ஏக்கருக்கும் அதிகமான பகுதி, சுற்றுச் சூழலுக்கு உகந்த சுற்றுலாத் துறைக்குப் பொருத்தமான பகுதியாக அடையாளம் கண்டுள்ளோம்.

ஹோடன் சமவெளிக்கு அருகில் மேலும் 900 ஏக்கர் உள்ளது. பசுமை சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் பங்களிப்பதன் மூலம் அங்கு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை அதிகரிக்க எதிர்பார்க்கிறோம். மேலும் பல இடங்களில் துடுப்புப் படகு சவாரி சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதுடன், அதன் வருமானத்தை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இலங்கை அதன் தனித்துவமான உணவு மற்றும் கலாச்சார துறைகளுடன் ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலா தலமாக உலகிற்கு காண்பிக்க முடியும்.

கிழக்கு மாகாணத்தை சுற்றுலா நகரமாக அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்துள்ளோம். அங்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்க விரும்பினால் அதற்கான வசதிகளை செய்துதர தயாராக உள்ளோம். அதன்படி, கிழக்கு மாகாணத்தில் உள்ள கடற்கரையின் அழகை நீங்கள் அனுபவிக்க முடியும்.

சுற்றுலாத் துறையினால் பெருமளவான அன்னியச் செலாவணியை ஈட்ட முடியும். சரியான திட்டமிடலுடன் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் அடுத்த 10 வருடங்களில் தனிநபர் வருமானத்தை அதிகரிக்க முடியும்.

எனவே, நாம் ஏன் முழு BIMSTEC வலய நாடுகளையும் எல்லை வரையறுக்கப்படாத சுற்றுலா வலயமாக மாற்றக்கூடாது? நான் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றிருக்கிறேன். அனைத்து பகுதிகளிலும் 60-70 வகை பிரியாணி வகைகள் காணப்படுகின்றன.

நீங்கள் எமது மட்டக்களப்பு பிரதேசத்திற்கு சென்றால் தனித்துவமான சுவையில் பிரியாணியை ருசிக்கலாம். நாம் அதன் விற்பனையை ஏன் பிரசித்தப்படுத்தவில்லை? தாய்லாந்து மக்கள் தங்களது உணவு வகைகளை விற்பனை செய்யும் விதத்தை பாருங்கள். இந்தியாவில் கூட கிடைக்காத சிக்கன் டிக்கா மசாலா வகையை தாய்லாந்து சந்தைப்படுத்துகிறது. அதனால் ஒவ்வொரு பகுதியினதும் தனித்துவத்தை பிரதிபலிக்கும் பிரியாணி வகைகளை தயார் செய்ய வேண்டும்.

நாம் BIMSTEC வலயத்தை உருவாக்கியதன் நோக்கம் என்ன? . வங்காள விரிகுடாவை நாம் ஏன் கப்பல் பயணங்களுக்காக பயன்படுத்தாமல் இருக்கின்றோம்? கிழக்கு ஆசியா, இந்தியா, தென்கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்ற போது அவர்களுக்கு அவசியமான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது அவசியமாகும். .

எமது சுற்றுலாத்துறை மேம்பாட்டுத் திட்டங்களை தற்போது ஆரம்பிக்கும் பட்சத்தில் நாம் 10 வருடங்களுக்குள் அபிவிருத்தி அடைந்த சுற்றுலாத்துறைக்கு சொந்தக்காரர்கள் ஆக முடியும்.

கிரிக்கெட் விளையாட்டில் கவனம் செலுத்தும் போது, இந்தியா இப்போது முன்னணியில் உள்ளது. கிரிக்கெட்டில் இவ்வளவு வெற்றிகளைப் பெற்றுள்ள நாம் ஒன்றிணைந்து செயற்பட்டால் சுற்றுலாத்துறையிலும் ஏராளமான வெற்றிகளைப் பெறலாம். எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது பிரதேசத்தை சுற்றுலாப் பிரதேசமாக மேம்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.” என ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.