;
Athirady Tamil News

கேரளாவில் போக்சோ வழக்குகள் 4 மடங்கு அதிகரிப்பு: சிறுவர்-சிறுமிகள் அதிகளவில் பாதிப்பு!!

0

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள், வாகனங்கள், ஓட்டல்கள் என பல இடங்களில் அவர்கள் பாலியல் ரீதியாக பாதிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. பாலியல் சம்பவங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக கடந்த 2012-ம் ஆண்டு போக்சோ சட்டம் (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012) கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் வருவதற்கு முன்பு வரை குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் பதியப்பட்டது. போக்சோ சட்டம் வந்தபிறகு, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் அனைத்தும் இந்த சட்டத்தின் கீழ்தான் பதியப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதாரண சிறை தண்டனை முதல், கடுங்காவல் மற்றும் ஆயுள் தண்டனை வரை கொடுக்கப்படும்.

அனைத்து மாநிலங்களிலும் போக்சோ சட்டத்தின் கீழ் அதிகமான வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன. கேரள மாநிலத்தில் போக்சோ வழக்குகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. 2012-ம் ஆண்டு போக்சோ சட்டம் அமலாகிய நிலையில், கேரள மாநிலத்தில் கடந்த 2013-ம் ஆண்டு 1,002 வழக்குகள் பதிவாகின. ஆனால் கடந்த ஆண்டு அதன் எண்ணிக்கை 4,582 ஆக அதிகரித்து உள்ளது. 2013-ஆண்டை ஒப்பிடுகையில் இது 4 மடங்கு அதிகமாகும். இந்த வழக்குகளில் மொத்தம் 5,002 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் களில் 4,643 பேர் ஆண்கள். 115 பேர் பெண்கள்.

மீதமுள்ள 244பேர் ஆணா அல்லது பெண்ணா என்ற விவரம் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு பதிவாகியிருக்கும் போக்சோ வழக்குகளில் 1,004 சம்பவங்கள் வீடுகளிலும், 133 சம்பவங்கள் பள்ளிகளிலும், 102 சம்பவங்கள் வாகனங்களிலும், 99 சம்பவங்கள் ஓட்டல்களிலும், 96 சம்பவங்கள் நண்பர்களின் வீடுகளிலும், 29 சம்பவங்கள் மருத்துவமனைகளிலும், 12 சம்பவங்கள் குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களிலும், மற்றவை வேறு சில பொதுவான இடத்திலும் நடந்துள்ளது. பாலியல் அத்துமீறல்களில் பாதிக்கப்பட்டவர்களில் 15 முதல் 18 வயதுடைய சிறுவர்-சிறுமிகளே அதிகம். பெரும்பாலான குழந்தைகள் தங்களது சொந்த வீட்டிலேயே உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரால் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

மாவட்ட அளவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் 583-ம், மலப்புரத்தில் 555-ம், எர்ணாகுளத்தில் 464-ம் கடந்த ஆண்டில் போக்சோ வழக்குகள் பதிவாகி உள்ளன. பத்தினம்திட்டா மாவட்டத்தில் மட்டும் மிகவும் குறைவாக 189 போக்சோ வழக்குகள் பதிவாகி இருக்கிறது. கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.