;
Athirady Tamil News

மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து கடற்கரைக்கு வந்த காட்டு யானைகள்

0

மட்டக்களப்பு – படுவாங்கரைப் பகுதியிலிருந்து வாவியில் நீந்தி எழுவாங்கரைப் பகுதிக்கு இரண்டு காட்டு யானைகள் உட்புகுந்துள்ளதனால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த காட்டு யானைகள் இன்று (03.11.2023) அதிகாலை சுமார் 3 மணியளவில் மட்டக்களப்பு வாவியை நீந்தி களுதாவளைக் கிராமத்திற்குள் உட்புகுந்துள்ளன.

உட்புகுந்த காட்டு யானைகள்
இவ்வாறு கிராமத்திற்குள் உட்புகுந்த இரு காட்டு யானைகளும், தோட்டங்களையும் வீட்டு வேலிகளையும், நாசம் செய்துவிட்டு கடற்கரைப் பகுதியூடாக சென்று தேத்தாத்தீவு கடற்கரையில் அமையப்பெற்றுள்ள சவுக்கு பற்றை காட்டினுள் புகுந்துள்ளன.

பின்னர் பொதுமக்கள் ஒன்றிணைந்து காட்டு யானைகளை அப்புறப்படுத்துவதற்கு முனைந்தபோது அதற்கு இடம்கொடுக்காத யானைகள் மாங்காடு கிராமத்தில் அமைந்துள்ள தோட்டங்களுக்குள் உட்புந்துள்ளன.

இந்த நிலையில் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தின் மத்தியில் தமது தோட்டங்களுக்கு காலை வேளையில் நீர் பாய்ச்சுவதில் பெரும் சிரமங்களை எதிர் கொண்டிருந்தனர்.

தற்போது வனஜீவராசிகள் பாதுகாப்பு திணக்கள உத்தியோகஸ்த்தர்கள் ஸ்தலத்திற்கு விரைந்து கடற்கரையில் அமைந்துள்ள சவுக்குமர பற்றைக் காட்டினுள் தரித்து நிற்கும் யானைகளுக்கு சத்தமிட்டு கோபம் ஏற்படுத்தாது அங்கு கூடியிருந்த பொதுமக்களை அப்புறப்படுத்தியுள்ளனர்.

எனினும் காட்டு யானைகள் படுவாங்கரைப் பகுதியிலிருந்து எவ்வாறு கடற்கரையை அண்டியுள்ள எழுவாங்கரைப் பகுதிக்கு உட்புகுந்ததோ அதே பாதையூடாக மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அவற்றை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகஸ்த்தர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.