;
Athirady Tamil News

தீபத்திருவிழா.. அலைமோதும் பக்தர்கள் கூட்டம், இடிந்து விழுந்த சுவர் – 10 பேர் காயம்!

0

திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தீபத்திருவிழா
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் பல கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று அதிகாலை 3.40 மணிக்கு கோவில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீப தரிசனத்தைக் காண நள்ளிரவு முதலே திரளான பக்தர்கள் காத்திருந்து, தரிசன செய்தனர்.

இடிந்த சுவர்
இந்நிலையில், தீபத்திருவிழாவை முன்னிட்டு 2,500 பக்தர்களுக்கு மட்டுமே மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதிச்சீட்டு அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் கொடுக்கப்பட்டது. அதனை பெற அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அதில் பலர் முண்டியடித்துக்கொண்டு வந்ததால் பக்தர்கள் மற்றும் காவல் துறையினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் சில பக்தர்கள் கல்லூரியின் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்தனர். இதனால் அந்த சுவர் இடிந்து விழுந்தது, இதில் 10-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அங்கு வரிசையில் நிற்க அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளும் உடைக்கப்பட்டன. இதனால் பக்தர்களை தடுக்க போலீசார் போராடுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.