;
Athirady Tamil News

செந்தில் பாலாஜி வழக்கு ஆவணங்கள்:ஆய்வு செய்ய அமலாக்கத் துறைக்கு அனுமதி

0

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரானபோக்குவரத்து பணி நியமன பண மோசடி வழக்கில் தொடா்புடைய ஆவணங்களை ஆய்வு செய்ய அமலாக்கத் துறைக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

2011-16 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, அத்துறையில் பணி நியமனங்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அவா் மீதும், அவரது சகோதரா் மீதும் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்தது.

இதுதொடா்பான விசாரணையை நிறைவு செய்த சிபிசிஐடி போலீஸாா், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, செந்தில்பாலாஜி மற்றும் வழக்கில் தொடா்புடையவா்கள் மீதான குற்றப்பத்திரிகையை கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான குற்றவழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.

சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் அந்த வழக்கை விசாரித்து வருகிறாா்.

இந்த நிலையில், சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு ஆவணங்களை ஆய்வு செய்ய அனுமதிக்குமாறு அமலாக்கத் துறை கோரிக்கை விடுத்தது.

அதற்கான மனுவை அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்குரைஞா் ரமேஷ் தாக்கல் செய்தாா்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அலுவல் நேரத்தில் குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்ய அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.