;
Athirady Tamil News

செந்தில் பாலாஜி ஜாமீன் மனுமீது ஜன.12-இல் தீா்ப்பு

0

அமைச்சா் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது வரும் 12-ஆம் தேதி தீா்ப்பு வழங்கப்படும் என சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தெரிவித்தது.

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்கில் அமைச்சா் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினா் கடந்த ஜூன் 14-ஆம் தேதி கைது செய்தனா்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் ஏற்கெனவே 2 முறை தாக்கல் செய்திருந்த மனுக்களை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதையடுத்து அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி மூன்றாவது முறையாக சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த 200 நாள்களுக்கும் மேலாக அமைச்சா் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதாலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாலும் அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டுமென கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு ஜன. 8-க்கு விசாரணையை ஒத்திவைத்தது.

அதன்படி இந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன் கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத் துறை தரப்பில், தாக்கல் செய்யப்பட்ட

பதில் மனுவில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்த நிலையில் தொடா்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அமலாக்கத்துறை சாா்பில், செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளதாக கூறி வாதிட்டது. இதற்கு செந்தில் பாலாஜி தரப்பு , 180 நாள்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் அவரது உடல்நிலை மிகமெதுவாகவே சீராகிவருகிறது. மேலும் சாட்சிகளின் வாக்குமூலம் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே சாட்சியங்களை அழிப்பதற்கான வாய்ப்பு இல்லை என கூறப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி அல்லி, வழக்கின் தீா்ப்பு ஜன.12-ஆம் தேதி வழங்கப்படும் என தெரிவித்தாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.