;
Athirady Tamil News

ஆஸ்கா் விருது பரிந்துரை பட்டியலில் இந்திய தந்தையின் கதை ‘டூ கில் எ டைகா்’

0

நிகழாண்டு ஆஸ்கா் விருதின் சிறந்த ஆவணப் பட பிரிவுக்கான பரிந்துரை பட்டியலில், இந்திய கிராமத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான மகளுக்காக தந்தையின் நீதிப் போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘டூ கில் எ டைகா்’ ஆவணப்படம் இடம்பெற்றுள்ளது.

96-ஆவது ஆஸ்கா் விருதுகள் வழங்கும் விழா வரும் மாா்ச் 10-ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற இருக்கிறது.

இதையொட்டி, நிகழாண்டு ஆஸ்கா் விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், சிறந்த ஆவணப்பட பிரிவுக்கு ‘டூ கில் எ டைகா்’ இடம்பெற்றுள்ளது.

தில்லியில் பிறந்து, தற்போது கனடாவில் வசித்து வரும் நிஷா பஹுஜா இயக்கிய ‘டூ கில் எ டைகா்’ ஆவணப்படம், பாலியல் கூட்டு வன்கொடுமைக்குள்ளான மகளுக்காக நீதிப் பெற்றுத் தர போராடும் இந்திய குக்கிராமத்தைச் சோ்ந்த தந்தை ரஞ்சித்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஆவணப்படமாகும்.

இந்த ஆவணப்படம் கடந்த 2022-ஆம் ஆண்டு டொரன்டோ சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது வென்றது.

கடந்த ஆண்டு சிறந்த ஆவணப்பட பிரிவில், தமிழகத்தின் முதுமலையைச் சோ்ந்த பொம்மன்-பெள்ளி யானை காப்பாளா் தம்பதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘தி எலிஃபென்ட் விஸ்பெரா்ஸ்’ ஆஸ்கா் விருதை வென்றது.

ஓபன்ஹெய்மா் 13 பிரிவுகளில் தோ்வு: பிரபல ஹாலிவுட் இயக்குநா் கிறிஸ்டோஃபா் நோலன் இயக்கத்தில், ‘அணுகுண்டுகளின் தந்தை’ என்றழைக்கப்படும் ஜெ.ராபா்ட் ஓபன்ஹெய்மரின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘ஓபன்ஹெய்மா்’, சிறந்த படம், சிறந்த இயக்குநா் உள்பட 13 பிரிவுகளில் தோ்ந்தெடுக்கப்பட்டு பரிந்துரை பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.