;
Athirady Tamil News

இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய மாடிக்கட்டடம் வடக்கு மாகாண ஆளுநரால் திறந்துவைப்பு.

0

யாழ்ப்பாணம் இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய மாடிக்கட்டட நோயாளர் விடுதி வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களால் நேற்று (11.03.2024) மாலை திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர்கள், அதிகாரிகள், நோயாளர் நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

நோயாளர் விடுதியை பார்வையிட்ட கௌரவ ஆளுநர், முதலாவது நோயாளரையும் விடுதியில் அனுமதித்தார். இதன்போது நிகழ்வின் பிரதம விருந்தினருக்கான உரையை ஆற்றிய கௌரவ ஆளுநர்,

வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் துறையை கட்டியெழுப்புவதற்கான விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். நோயாளர்களை அதிகரித்து சுகாதாரத் துறையை வீழ்ச்சியடைய செய்ய தான் ஒருபோதும் விரும்பவில்லை எனவும், தற்கால உணவு பழக்கவழக்கம் உள்ளிட்ட செயற்பாடுகளால் ஏற்படக்கூடிய நோய்களை தடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைத்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கிராமிய, பிரதேச வைத்தியசாலைகளுக்கு தேவையான மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டிய தேவை வடக்கு மாகாணத்தில் காணப்படுகிறது. மேலும் இளவாலை கிராமத்திற்கு தேவையான வசதிகளை பெற்றுக் கொடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பும் எனக்கு உள்ளது. இந்த விடயங்களை கருத்திற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

அத்துடன் இளவாலை கிராம அபிவிருத்திக்காக செயற்படும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் நோயாளர் நலன்புரிச்சங்க உறுப்பினர்களுக்கும் ஆளுநர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.