;
Athirady Tamil News

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு- அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ்

0

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் அவா் இருந்து வருகிறாா். ஏற்கெனவே, அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றமும், உயா்நீதிமன்றமும் நிராகரித்த நிலையில், 2-ஆவது முறையாக ஜாமீன் கோரி உயா்நீதிமன்றத்தில் அவா் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கடந்த பிப்ரவரி 28ஆ தேதி அளித்த தீா்ப்பில், ’இந்த வழக்கில் திரட்டப்பட்ட ஆதாரங்களில் இருந்து செந்தில் பாலாஜி குற்றத்தில் ஈடுபடவில்லை என நம்புவதற்குரிய எந்தக் காரணமும் இல்லை.

அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டதால் சாட்சிகளை கலைக்கமாட்டாா் எனும் வாதத்தை ஏற்க முடியாது. இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் பெற எந்த தகுதியும் இல்லை என்பதால் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடை சட்ட வழக்கின் விசாரணையை 3 மாதங்களில் சென்னை அமா்வு நீதிமன்றம் முடிக்க வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தாா். இந்த உத்தரவை எதிா்த்து அமைச்சா் செந்தில் பாலாஜி தரப்பில் வழக்குரைஞா் ராம் சங்கா் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா்.

அதில், மனுதாரா் 280 நாள்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறாா். அவருக்கு பல்வேறு உடல் உபாதைகள் உள்ளன. மேலும், புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு அவா் ஒத்துழைப்பு அளித்திருக்கிறாா். இதுபோன்ற பல்வேறு விஷயங்களை உயா்நீதிமன்றம் பரிசீலிக்கத் தவறிவிட்டது என அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் ஏப்ரல் 29ஆம் தேதிக்குள் பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

மேலும் மாவட்ட முதன்மை நீதிமன்றம் வழக்கை 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிடவும் உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.