;
Athirady Tamil News

குற்றச்செயல்கள் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

0

2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு (Sinhala and Tamil New Year) காலப்பகுதியில் பொலிஸ் நிலையங்களில் பதிவாகும் குற்றங்கள் மற்றும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 10 ஏப்ரல் 2024 முதல் 17 ஏப்ரல் 2024 வரையிலான காலகட்டத்தில் பதிவான குற்றங்கள் மற்றும் போக்குவரத்து விபத்துக்கள் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து இந்த விடயம் தெரியவந்துள்ளது.

யுக்திய நடவடிக்கை
இதன்படி, 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024ஆம் ஆண்டின் ஏப்ரல் விடுமுறை காலத்தின் 08 நாட்களில், கொலை சம்பவங்கள் 26இல் இருந்து 20 ஆக குறைவடைந்துள்ளது.

மேலும், காயங்களை ஏற்படுத்தும் சம்பவங்கள் 507 வழக்குகளில் இருந்து 389 வழக்குகளாக குறைவடைந்துள்ளதுடன் தாக்குதல் வழக்குகள் 4,431 வழக்குகளில் இருந்து 4,018 வழக்குகளாக பதிவாகியுள்ளது.

சர்ச்சைகள் மற்றும் மோதல் சம்பவங்கள் 4,425இல் இருந்து 3,936 சம்பவங்களாக குறைந்துள்ள நிலையில் இந்த தரவுகளின் பிரகாரம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் புத்தாண்டு காலத்தில் குற்றச்செயல்கள் வெகுவாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய நடவடிக்கையே இதற்குக் காரணம் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

எனினும், போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குற்றச் செயல்களுக்கு எதிரான ‘யுக்திய’ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தவும், நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் பிரிவுகளுக்கு ஏற்ற வகையில் குற்றத் தடுப்புத் திட்டங்களைத் தயாரித்து அடுத்த மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.