;
Athirady Tamil News

ஊடக சுதந்திரத்தில் இலங்கைக்கு கிடைத்த இடம்!

0

ஊடக சுதந்திர குறிகாட்டியின் படி,180 நாடுகளின் வரிசையில் இலங்கை 35.21 புள்ளிகளுடன் 150 இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலை எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 2023 ஆம் ஆண்டு இலங்கை 135 ஆவது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,

இலங்கையில் பத்திரிகை சுதந்திர விடயங்கள் 2009 ஆம் ஆண்டுவரை நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்துடன் தொடர்பு பட்டிருந்தாக சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டபோது பல பத்திரிகையாளர்களுக்கு எதிராக இடம்பெற்ற குற்றங்களுக்கு இன்னமும் நீதி வழங்கப்படாத நிலையே காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் இரண்டரை கோடி மக்கள் வசிக்கின்ற நிலையில் தற்போதும் ஊடக சுதந்திரம் கேள்விக்குறியாகவே உள்ளதாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு தசாப்தங்களாக இலங்கையில் பல ஊடகவியளார்கள் கொல்லப்பட்டும் பல ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

எனினும் இவற்றுக்கு இன்றுவரை எந்தவொரு நீதியையும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் வழங்கவில்லை.

இந்த நிலையில், இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் இராணுவம் மற்றும் பொலிஸாரினால் திட்டமிட்ட முறையில் கண்காணிக்கப்படுவதாகவும் துன்புறுத்தப்படுவதாகவும் எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த 2003ஆம் ஆண்டு தொடக்கம் 2022 ஆம் ஆண்டு வரையில் ஆயிரத்து 668 ஊடகவியலாளர்கள் சர்வதேச ரீதியில் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையை பொறுத்தவரை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்திலேயே 44 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அதில் பொரும்பாலானோர் வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பதும் இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை நீதி வழங்கப்படவில்லை என்பதும் கவலைக்குரிய விடயமாகும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.