;
Athirady Tamil News

ஜனாதிபதி செயலகத்திலிருந்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கடிதம்

0

ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பணிப்பாளர் என்று கூறிக்கொண்ட ஒருவருக்கு எதிராக இலஞ்ச குற்றச்சாட்டுகளை சுமத்தும் புத்தளம் மாவட்ட பிரதேச செயலாளரின் முகப்புத்தக பதிவு தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி செயலகம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதனை கொழும்பின் ஊடகம் ஒன்று தமது சிறப்பு செய்தியாக வெளியிட்டுள்ளது.

நிறுத்தி வைக்கப்பட்ட நட்ட ஈடு
ஜனாதிபதி அலுவலகத்தில் ஊடகப் பணிப்பாளர் என்று கூறிக்கொள்ளும் ஒருவரிடமிருந்து தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், தனது பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரின் இலக்கத்தை அவர் கேட்டதாகவும் புத்தளம் பிரதேச செயலாளர் கூறியுள்ளார்.

பிரதேசத்தில் வசிக்கும் குறிப்பிட்ட பொதுமகன் ஒருவரின் காணியை, அரசு கையகப்படுத்தியமைக்காக அவருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அண்மையில் வழங்கப்பட்டது.

எனினும், ஜனாதிபதி செயலக ஊடகப் பணிப்பாளர் என்று கூறிக்கொண்டவர், நட்டஈடு வழங்குவதற்கு எதிராக மனுவொன்று தமக்கு கிடைத்துள்ளதாகவும், எனவே விசாரணை முடியும் வரை நட்ட ஈட்டை நிறுத்தி வைக்குமாறும் பிரதேச செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.

இழப்பீட்டு தொகை
இந்தநிலையில் பிரதேச செயலாளர் நட்டஈடு பெற்றுக்கொண்டவரை அழைத்து, விசாரணை நடத்தியபோது, அவர், ஜனாதிபதி செயலக ஊடகப்பணிப்பாளர் என்று கூறிக்கொள்பவர், தம்மிடம் இழப்பீட்டு தொகையை குறைக்குமாறு வலியுறுத்துவதாக பிரதேச செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பிரதேச செயலாளர்களை இலஞ்சம் கேட்கும் கைப்பாவைகளாக பாவிக்கும் நிலைக்கு ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர்கள் வளர்ச்சியடைந்துள்ளனர் என்று பிரதேச செயலாளர் தனது முகப்புத்தக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் வெளியானதை அடுத்தே இலஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஊடகப் பணிப்பாளர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி செயலகம் கோரியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.