;
Athirady Tamil News

‘த நெயில்’ (The Nail) சஞ்சிகை வெளியீடு

0

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் குடிசார் மற்றும் சுற்றாடல் சங்கத்தின் முயற்சியில் உருவான ‘த நெயில்’ (The Nail) சஞ்சிகை வெளியீடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று வியாழக்கிழமை காலை (23.01.2025) இடம்பெற்றது.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா சிறப்பு விருந்தினராகவும், வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

ஆளுநர் தனது உரையில்,
முன்னைய காலங்களில் பொறியியலாளர்கள் பலர் இந்த மாகாணத்துக்காக அர்ப்பணிப்புடன் உழைத்திருந்தாலும் அவர்களின் அந்தக் கடின உழைப்புப்பற்றி எந்தவொரு ஆவணங்களும் எங்களிடம் இல்லை. குறிப்பாக நாங்கள் அன்று தொடக்கம் யாழ்ப்பாணத்துக்கான ஆறு என்ற அடிப்படையில் ஆறுமுகம் திட்டம் தொடர்பில் பேசி வந்தாலும், அது தொடர்பில் முறையான – முழமையான ஆவணங்கள் எங்களிடம் இல்லை.
ஆனால் தற்போது வெளியிடப்படும் ‘த நெயில்’ சஞ்சிகை ஊடாக பொறியிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அனுபவங்கள் அனைவருக்கும் பகிரப்படுகின்றது. இது சிறப்பான முயற்சி. பாராட்டப்படவேண்டியது.

சவால்களை எதிர்கொள்ளாவிட்டால் எங்களின் ஆளுமையை விருத்தி செய்ய முடியாது. சவால்களை எதிர்கொள்ளும்போதுதான் அந்தச் சவால்களை நாங்கள் வெற்றிகொள்கின்றோம். அதன் ஊடாக எங்கள் ஆளுமைகளை மேலும் விருத்தியடையச் செய்துகொள்ளலாம். மிகப்பரந்துபட்ட அனுபவமானது எழுத்துமூலமான போதனையைவிட மேம்பட்டது.

மாணவர்களின் புத்தாக்க சிந்தனைக்கும் இடமளிக்கும் வகையில் அவர்களுடைய ஆக்கங்களையும் இந்த சஞ்சிகையில் உள்வாங்கியமை சிறப்பம்சமாகும். புத்தகக் கல்விக்கு அப்பால் பரிசோதனைகள் – பயிற்சிகள் மாணவர்களுக்கு முக்கியம். அது இல்லாமல் அவர்களது அறிவு முழுமையடையாது, என ஆளுநர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.