கேரளாவில் அரசு செவிலியர் கல்லூரியில் ராகிங் செய்ததாக 5 மாணவர்கள் கைது

கேரளாவில் அரசு செவிலியர் கல்லூரியில் இளநிலை மாணவர்களை ராகிங் செய்ததாக 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் கோட்டயம் நகரில் அரசு செவிலியர் கல்லூரி உள்ளது. இதில் முதலாமாண்டு படித்து வரும் 3 மாணவர்கள், கோட்டயம் நகரில் உள்ள காந்திநகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு தாக்கல் செய்தனர்.
அதில், “மூன்றாமாண்டு பயிலும் 5 மாணவர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தொடர்ந்து எங்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ராகிங் செய்து வருகின்றனர். குறிப்பாக ஆடையின்றி நிற்குமாறு கட்டாயப்படுத்தினர். ஜியாமெட்ரியில் உள்ள காம்பஸ் மூலம் குத்தி காயப்படுத்தினர்.
இதை வீடியோவாக பதிவு செய்ததுடன், இதுகுறித்து புகார் செய்தால் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என மிரட்டினர். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் மது அருந்துவதற்காக மிரட்டி பணம் பறித்தனர்” என கூறியுள்ளனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில், 3-ம் ஆண்டு பயிலும் 5 மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் கல்லூரி நிர்வாகம் அவர்களை இடைநீக்கம் செய்துள்ளது