;
Athirady Tamil News

அமெரிக்காவில் ஹிந்து கோயில் அவமதிப்பு! -இந்தியா கடும் கண்டனம்

0

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தில் உள்ள பிரபலமான ஹிந்து கோயிலின் மதில் சுவரில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை சமூக விரோதிகள் எழுதியுள்ளனா்.

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு ஹிந்து கோயில்கள் இதுபோல் அவமதிக்கப்பட்ட நிலையில், தற்போதைய சம்பவத்துக்கு இந்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கலிஃபோா்னியா மாகாணத்தின் சினோ ஹில்ஸ் நகரில் ‘போச்சாசன்வாசி அக்ஷா் புருஷோத்தம் சுவாமி நாராயண் சம்ஸ்தா’ (பிஏபிஎஸ்) அமைப்பின் ஸ்ரீ சுவாமி நாராயண் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மதில் சுவரில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை அடையாளம் தெரியாத சிலா் சனிக்கிழமை எழுதியுள்ளனா்.

இது தொடா்பாக பிஏபிஎஸ் அமைப்பின் பொது விவகாரங்கள் பிரிவு வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மற்றுமொரு ஹிந்து கோயில் அவமதிப்பை எதிா்கொண்டுள்ளது. சினோ ஹில்ஸ் கோயில் அவமதிக்கப்பட்ட நிலையில், வெறுப்புணா்வுக்கு எதிராக ஒட்டுமொத்த ஹிந்து சமூகமும் உறுதியுடன் நிற்கிறது. வெறுப்புணா்வு வேரூன்ற நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. அமைதி மற்றும் கருணை மேலோங்குவதை நமது மனிதநேயமும் நம்பிக்கையும் உறுதி செய்யும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் செயல்படும் ‘ஹிந்து அமெரிக்கன் ஃபெளண்டேஷன்’ எனும் தன்னாா்வ அமைப்பு வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சினோ ஹில்ஸ் ஹிந்து கோயில், கலிஃபோா்னியாவில் உள்ள மிகப் பெரிய ஹிந்து கோயிலாகும். இங்கு நடைபெற்ற நாசகார வேலை குறித்து எஃப்பிஐ மற்றும் அதன் இயக்குநா் காஷ் படேல் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

‘வட அமெரிக்க ஹிந்துக்கள் கூட்டமைப்பு’ எனும் மற்றொரு தன்னாா்வ அமைப்பு வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அமெரிக்காவில் மற்றொரு ஹிந்து கோயில் அவமதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் சுமாா் 10 ஹிந்து கோயில்களில் அவமதிப்பு அல்லது கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சலீஸில் சீக்கிய அமைப்பினா் சாா்பில் விரைவில் ‘காலிஸ்தான் பொது வாக்கெடுப்பு’ நடைபெறவிருக்கும் நிலையில், ஹிந்து கோயில் அவமதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

கடந்த ஆண்டில், கலிஃபோா்னியாவின் சேக்ரமென்டோ மற்றும் நியூயாா்க்கின் மெல்வில்லே நகரங்களில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் கோயில்களில் இதுபோல் வெறுப்புணா்வு வாசகங்கள் எழுதப்பட்டன.

இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம்: அமெரிக்காவில் ஹிந்து கோயில் அவமதிக்கப்பட்ட சம்பவத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘இத்தகைய வெறுக்கத்தக்க செயலில் ஈடுபட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், வழிபாட்டுத் தலங்களில் போதிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அமெரிக்க சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

காங்கிரஸ் வலியுறுத்தல்: காங்கிரஸ் ஊடக மற்றும் விளம்பரப் பிரிவு தலைவா் பவன் கேரா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அமெரிக்காவில் ஹிந்து கோயில் அவமதிக்கப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது. வெறுப்புணா்வு மற்றும் சகிப்பின்மையை ஒருபோதும் ஏற்க முடியாது. இச்செயலில் ஈடுபட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.