ஆனையிறவு தேசிய உப்பளத்தில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினம்

கிளிநொச்சி மாவட்டச் செயலகமும் மாவட்ட மகளிர் விவகாரக் குழுக்களும் இணைந்து நடாத்தும் 2025ம் ஆண்டின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று திங்கட்கிழமை (2025.03.10) நண்பகல் 12.00 மணிக்கு ஆனையிறவு தேசிய உப்பளத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சி ஆனையிறவு தேசிய உப்பளத்தில் பணியாற்றும் பெண் பணியாளர்களை மையப்படுத்தியதாக குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
“நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு வலுவான வழிகாட்டி” எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) இ.நளாயினி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், சிறப்பு விருந்தினராக ஆனையிறவு உப்பளத்தின் முகாமையாளர் வி.சுகந்தன், கௌரவ விருந்தினராக சட்டத்தரணி ரா.சரண்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, விருந்தினர்களின் உரைகள் அனுபவப் பகிர்வுகள் இடம்பெற்றன.
சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்கள் கௌரவிக்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மேலும் ஆனையிறவு தேசிய உப்பளத்தில் பணியாற்றும் பெண் பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இதனைவிட கிரிவலம் பவுண்டேஷனால் இரண்டு பல்கலைக்கழக மாணவிகளுக்கு மடிக்கணினி மற்றும் கற்றல் உதவுதொகையும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் ஹ.சத்யஜீவிதா, மாவட்ட செயலாக பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் நி.குமுதினி, நிர்வாக உத்தியோகத்தர் ம.அருந்தவராணி, கண்டாவளை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் பி.சுரேகா, கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் உதயனி நவரத்தினம், அனுசரணையாளர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆனையிறவு தேசிய உப்பள உத்தியோகத்தர்கள் மற்றும் பெண் பணியாளர்கள் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.