;
Athirady Tamil News

மோரீஷஸ் வரை பிரபலமடைந்த ஆயுர்வேதம்: பிரதமர் மோடி

0

இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் ஒன்றான ஆயுர்வேதம் மோரீஷஸ் வரை பிரபலமடைந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மோரீஷஸ் பிரதமா் நவீன்சந்திர ராம்கூலம் விடுத்த அழைப்பின்பேரில், அந்நாட்டின் 57-ஆவது தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்க 2 நாள்கள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டிற்குச் சென்றுள்ளார்.

இருநாடுகளுக்கு இடையிலான கூட்டுறவை மேம்படுத்தவும், மக்களின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக இரு நாடுகளின் நட்புறவை வலுப்படுத்தவும் பிரதமர் மோடி மோரீஷஸ் சென்றுள்ளார்.

இன்று காலை மோரீஷஸ் சென்ற மோடிக்கு அந்நாட்டு பிரதமர் நவீன் ராம்கூலம் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தார்.

இதனைத் தொடர்ந்து மோரீஷல் குடியரசுத் தலைவர் தரம்பீர் கோகூல் அளித்த மதிய விருந்தில் பங்கேற்றார். இதில், இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டு நடவடிக்கைகளில் இந்தியாவின் அர்ப்பணிப்பு உணர்வை உறுதிப்படுத்தினார்.

பின்னர் தரம்பீர் கோகூலுடன் அரசு மாளிகையில் இருந்த ஆயுர்வேத தோட்டத்தைப் பார்வையிட்டார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளதாவது,

மோரீஷஸ் நாட்டின் அரசு மாளிகைத் தோட்டத்தில் ஆயுர்வேத தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. மோரீஷஸில் ஆயுர்வேதம் பிரபலமடைந்துள்ளது எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். ஆயுர்வேத தோட்டத்தை நேரடியாகப் பார்வையிடும் அனுபவத்தை குடியரசுத் தலைவர் தரம்பீர் கோகூல் அளித்துள்ளார் என மோடி பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.