;
Athirady Tamil News

சிறைப்பிடிப்பு எதிரொலி: பாக். பிரதமர் பலூசிஸ்தான் பயணம்!

0

பாகிஸ்தான் நாட்டில் பயணிகள் ரயில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பலூசிஸ்தான் மாகாணத்திற்கு அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் பயணம் மேற்கொள்கின்றார்.

பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மார்ச்.11 அன்று குவேட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கி சென்ற பயணிகள் ரயிலை பெரோ குன்ரி, கடாலாா் பகுதிகள் இடையே பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) என்ற தீவிரவாதக் குழு சிறைப்பிடித்தது. இந்த சம்பவத்தில் அந்த ரயிலில் பயணித்த 4 பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் 21 பயணிகள் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் (மார்ச் 12) அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்ட பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் அந்த ரயிலைக் கடத்திய 33 தீவிரவாதிகளைக் கொன்று 300க்கும் மேற்பட்ட பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

இந்நிலையில், இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவும், ரயில் சிறைப்பிடிப்பு நிகழ்ந்த இடத்தை பார்வையிடவும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் இன்று (மார்ச் 13) பலூசிஸ்தான் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணத்தில் அவருடன் அந்நாட்டு துணைப் பிரதமர் முஹம்மது இஷாக் தார், தொலைத் தொடர்பு அமைச்சர் அட்டாவுல்லா தரார் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பங்கேற்பதாகக் கூறப்படுகின்றது.

முன்னதாக, ரயில் சிறைப்பிடிப்பு மீட்பு நடவடிக்கை வெற்றி பெற்றதை அறிவித்த ராணுவ உயர் அதிகாரி ஒருவர், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகள் அனைவரும் செய்ற்கை கோள் தொலைப்பேசி மூலம் ஆப்கானிஸ்தானிலுள்ள அவர்களது தலைவர்களுடன் தொடர்பில் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தானின் விமானப் படை, ராணுவப் படை, சிறப்பு அதிரடி படைகள் உள்ளிட்டோர் பங்குபெற்று பயணிகளை பத்திரமாக மீட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.