;
Athirady Tamil News

தமிழரசுக் கட்சியை உடைத்து உருவாகின்றதா புதிய கட்சி : வெளிப்படுத்தும் சீ.வீ.கே

0

புதிய தமிழ் அரசுக் கட்சி உருவாக்கம் குறித்து ஒரு கதை பேசப்படுகிறது. உண்மையில் அப்படியாக கட்சிக்குள் இருப்பவர்கள் யாரும் கருதவில்லை.
அப்படியான எண்ணங்கள் கூட அவர்களிடத்தே இல்லை. ஏனெனில் கட்சியில் பலருடனும் இது தெடர்பில் பேசியிருந்த போது அவர்கள் அனைவரும் இதனை மறுதலித்துள்ளனர் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே சி.வீ.கே.சிவஞானம் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், இலங்கை
தமிழ் அரசுக் கட்சிக்கு எதிராக பல்வேறு சதி வலைகள் பின்னப்படுகிறது. அதிலும் தமிழரசுக்கட்சியை எப்படியாது சிதைத்து அதனை உடைத்து கட்சியை பிளவுபடுத்தி
விட வேண்டுமென சிலர் செயற்படுகின்றனர்.

இந்த அடிப்படையில் புதிய தமிழரசுக் கட்சி உருவாக்கம் குறித்து பேசப்படுகிறது. உண்மையில் அப்படியாக கட்சிக்குள் இருப்பவர்கள் யாரும் கருதவில்லை.

அப்படியான எண்ணங்கள் கூட அவர்களிடத்தே இல்லை. ஏனெனில் கட்சியில் பலருடனும் இது தெடர்பில் பேசியிருந்த போது அவர்கள் அனைவரும் இதனை மறுதலித்துள்ளனர்.

குறிப்பாக தமிழ் மக்களின் நீண்டகால பாரம்பரியக் கட்சியாக இருக்கின்ற இந்த தமிழரசுக் கட்சியை எப்படியாவது உடைத்துவிட வேண்டுமென விசமத்தனமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகிறது.

தமிழ் அரசுக் கட்சியைப் பொறுத்த வரையில் கடந்த 75 வருடகால வரலாற்றில் சோரம் போகாத ஊழலில் ஈடுபடாத தமிழ் மக்களின் பாரம்பரிய கட்சியாக இந்தக் கட்சியே திகழ்ந்து வருகிறது.

இத்தகைய கட்சியை உடைக்க பலரும் பல சந்தர்ப்பங்களில் முயற்சி செய்திருந்தாலும் இது பலனளிக்காத நிலைமையே ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமையில் ஐனநாயக தமிழரசு என்றும் புதிய தமிழரசு என்றும் புதிய புதிய பெயர்களைச் சொல்லிக் கொள்கின்றனர். அவ்வாறாக தமிழரசை உடைப்பவர்களுக்கு தமிழரசு என்ற சொல்லும் தேவைப்படுவது ஆச்சர்யமானது.

ஆக மொத்தத்தில் தமிழ் அரசுக் கட்சியை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நிறைவேறாது. ஆனாலும் தெற்கத்தேயே சிங்கள நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் உடைக்கும் முயற்சியை தொடர்ந்தும் செய்தாலும் அது பலனளிக்காது என்பதையும் சொல்லி வைக்க விரும்புகிறோம்.

மேலும் தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவராக நானும் பதில் செயலாளராக சுமந்திரனும் பதவிக்கு வருவதற்கு புதிதாக ஒன்றும் செய்யவில்லலை. யாப்பில் குளறுபடி செய்து இந்தப் பதவிகளுக்கு வரவில்லை.
எமது கட்சியின் யாப்பிற்கமைய தான் இப்போது அந்தப் பதவிகளை எடுத்திருக்கிறோம்.

இவ்வாறான நிலைமைகள் இருக்கத்தக்கதாக மக்கள் மத்தியில் பிழையான தகவல்களைப் பரப்பி விசமத்தனமான பிரசாரங்களை சிலர் மேற்கொள்கின்றனர். அதுவும் இப்போது தேர்தல் காலம் என்பதால் இன்னும் இன்னும் அதிகளவில் போலிப் பிரசாரத்தை முன்னெடுக்கின்றனர்.

எனவே தமிழரசை பிளவுபடுத்தும் நோக்கில் முன்வைக்கப்படும் பொய்ப் பிரசாரங்களை சரியான முறையில் எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறாக தமிழரசை இலக்கு வைத்து தமிழரசை உடைக்க முயற்சிகள் எடுத்தாலும் அதனூடாக விமர்சனங்கள் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி நாம் முன்னேறுவோம்.

மாற்றான சிந்தனையில் பொறுப்பான அனுகுமுறையை பின்பற்றி அனேகமாக எல்லா இடங்களிலும் சபைகளை கைப்பற்றுவோம். ஆனாலும்
ஆட்சியமைக்க தேவைப்படும் இடங்களில் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடனும் பேசுவோம் என்றார்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.