;
Athirady Tamil News

டேன் பிரியசாத் கொலையின் முக்கிய சந்தேக நபர் வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்

0

டேன் பிரியசாத் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான துலான் மதுஷங்க பல முக்கிய தகவல்களை வழங்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

டேன் பிரியசாத்தின் சகோதரரை கொலை செய்ததாகக் கூறப்படும் தரப்பினர் சமீபத்தில் வெல்லம்பிட்டி பகுதியில் நடைபெற்ற ஒரு புத்தாண்டு விழாவின் போது அவரை மிரட்டியதாக தெரியவந்துள்ளது.

கடந்த 20 ஆம் திகதி டேன் பிரியசாத் என்ற நபருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் விசாரணை
கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரான துலான் மதுஷங்காவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இதுவே பெரும்பாலும் காரணமாக இருக்கலாம் என்பது தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அன்றைய தினம் டேன் பிரியசாத் ஒரு முச்சக்கர வண்டியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியிருந்தார், மேலும் அந்த முச்சக்கர வண்டி டானின் சகோதரனைக் கொலை செய்த சந்தேக நபர்களுடையது என்பது தெரியவந்துள்ளது.

தற்போதைய விசாரணைகளின்படி, சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள துலான், தாக்குதலுக்குப் பிறகு டேன் பிரியசாத்தை கொல்ல திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

தற்போது டுபாயில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான கொலொன்னாவே தனுஷ்கவிடம் தாக்குதல் குறித்து அவர் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்திருந்தார். பின்னர் அவர் இந்த விடயம் பற்றி பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான காஞ்சிபாணி இம்ரானுக்குத் தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொலைக்கான காரணம்
முச்சக்கர வண்டி மீதான தாக்குதல் தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து, டேன் பிரியசாத்துக்கு 20 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு பொலிஸார் அழைப்பாணை அனுப்பியிருந்தனர். எனினும், அன்று அவர் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகவில்லை.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அந்த நேரத்தில் டேன் பிரியசாத்தை கொல்ல திட்டமிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

அன்றைய தினம் டேன் பிரியசாத் பொலிஸ் நிலையத்திற்கு வருகைத்தராததால் அவரது மனைவியின் வீட்டிற்குச் சென்று அவரை கொல்லத் திட்டமிட்டதாகவும் சந்தேக நபர் பொலிஸார் கூறியுள்ளார்.

டேன் பிரியசாத்தின் கொலை தொடர்பாக இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் உள்ளனர். அந்தக் குழுவில் டேன் பிரியசாத்தின் மனைவியின் சகோதரியும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள தந்தை மற்றும் மகன் இருவருக்கும் தொடர்பு இருப்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் தற்போது அந்தப் பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.