;
Athirady Tamil News

இந்திய – பாகிஸ்தான் எல்லைக்குச் செல்ல வேண்டாம்: அமெரிக்கா அறிவுறுத்தல்!

0

தாக்குதல் நடக்கும் இந்திய – பாகிஸ்தான் எல்லைக்குச் செல்ல வேண்டாம் என அமெரிக்க மக்களுக்கு அந்த நாட்டு வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து, இந்திய ராணுவம் நேற்று(செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு தாக்குதல் நடத்தியது. முன்னதாக பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்தும் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வந்தனர்.

இந்திய ராணுவத்தின் பதில் தாக்குதலையடுத்து எல்லையில் போர்ப் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்க மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

“பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலினால் இந்திய – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. எனவே, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடந்த பகுதிகளைச் சுற்றி இருக்கும் அமெரிக்கர்கள் அவ்விடத்தைவிட்டுச் செல்ல வேண்டும்.

அதேபோல, இந்திய – பாகிஸ்தான் எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம். பாகிஸ்தான் பயணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்.

வான்வெளியும் மூடப்பட்டுள்ளதால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய – பாகிஸ்தான் தாக்குதல் குறித்து நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்” என்று கூறியுள்ளது.

அதேபோல அமெரிக்க வெளியுறவுத்துறையும் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

தாக்குதல் நடக்கும் பகுதிகளைவிட்டு அமெரிக்க மக்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.