இந்தியா – பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போரை நிறுத்திவிட்டேன்! – அதிபர் டிரம்ப்

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுத போரை அமெரிக்கா நிறுத்திவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ தாக்குதலுக்கு “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் நடத்தப்பட்டது. அமெரிக்கா தலையிட்டதன் விளைவாக நிலம், வான் மற்றும் கடல் வழியாக அனைத்து துப்பாக்கிச் சூடுகளையும் ராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு உடன்பாட்டை எட்டியதையடுத்து, மே 10-ஆம் தேதி மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் அமலானது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், “இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரை அமெரிக்கா தலையிட்டு நிறுத்தியிருக்கிறது. இந்தப் போரில் பல லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம்.
இந்தப் போரை நிறுத்துவதற்கு துணையாக இருந்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோருக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.
இந்தியாவுடனும், பாகிஸ்தானுடனும் அதிகளவில் வர்த்தகம் செய்யப்போகிறோம். பாகிஸ்தானுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம். வர்த்தகத்தை முதன்மையாக வைத்தே இந்தப் போர் நிறுத்தப்பட்டிருக்கிறது.
சண்டையை நிறுத்தவில்லை என்றால் உங்கள் இருவருடன் வர்த்தக உறவை துண்டித்துவிடுவேன் என இந்தியா – பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடம் கூறினேன். வர்த்தகத்தைப் பயன்படுத்தி போரை நிறுத்தியவர்கள் என்னைப் போல் யாரும் கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.