;
Athirady Tamil News

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாடத் தடை! தலிபான்கள் உத்தரவு!

0

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தாலிபன் அரசு தெரிவித்துள்ளது. இது சூதாட்டத்துக்கு தொடர்பான விளையாட்டு என்றும், இதை மீறினால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் தலிபான் அரசு காலவரையற்ற தடையை விதித்துள்ளது.

இதுகுறித்து ஆப்கன் விளையாட்டுத்துறை செய்தித் தொடர்பாளர் அடல் மஷ்வானி கூறுகையில், “இஸ்லாமிய சட்டமான ஷரியாவில் செஸ் விளையாட்டு சூதாட்டத்தின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது. நல்லொழுக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் தீமையைத் தடுப்பதற்கான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆட்சேபனை தெரிவித்திருக்கின்றனர். அதற்கான முடிவுகள் எட்டப்படும் வரை இந்தத் தடை தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காபூலில் செஸ் விளையாட்டுடன் தொடர்புடைய கஃபே நடத்தும் அஸீஸுல்லா குல்ஸாடா கூறுகையில், “செஸ் விளையாட்டில் எந்தவித சூதாட்டமும் நடைபெறவில்லை. இஸ்லாமிய மக்கள் வாழும் பல்வேறு நாடுகளில் செஸ் போட்டி விளையாடப்படுகிறது. இது ஒருபுறம் எனது வணிகத்தை பாதித்தாலும், இளைஞர் இந்த விளையாட்டை விட்டுவிட்டு வேறு தவறான வழிக்குச் செல்லக்கூடும்” என்றார்.

தலிபான் ஆளும் ஆப்கானிஸ்தானில் கடந்தாண்டு, ஷரியா சட்டத்தில் அனைத்துப் போட்டிகளிலும் பெண்கள் பங்கேற்கத் தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், செஸ் விளையாட்டுக்கும் தடைவிதிக்கப்பட்டிருப்பது ஆப்கன் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.