டிக்டாக் நேரலையில் பேசிக்கொண்டிருந்த அழகுக் கலை பிரபலம் சுட்டுக்கொலை! விடியோ வைரல்!

மெக்சிகோ நாட்டில் பிரபல பெண் அழகுக் கலைஞர் ஒருவர் டிக்டாக் நேரலையில் பேசிக்கொண்டிருந்த போதே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
ஜலிஸ்கோ மாநிலத்தின் தலைநகரான குவாதலஹாராவிலுள்ள அழகு நிலையத்தில் வலேரியா மர்குவெஸ் (வயது 23) என்ற பெண் பிரபலம் ஒருவர் டிக்டாக் நேரலையில் தனது ரசிகர்களுடன் கடந்த மே 13 ஆம் தேதியன்று உரையாடிக்கொண்டிருந்தார்.
இதனிடையே, அங்கு டெலிவரி பணியாளர் போல வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் வலேரியாவின் நெஞ்சிலும் தலையிலும் துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இந்த முழு சம்பவமும் அவரது டிக்டாக் நேரலையில் பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த விடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
இதுக்குறித்து, விசாரணை மேற்கொண்டு வரும் அந்நாட்டு காவல் துறையினர் இது பாலின ரீதியான வன்முறையாக இருக்கக் கூடும் எனத் தெரிவித்துள்ளனர். லத்தீன் அமெரிக்கா நாடுகளில் பெண்கள் பாலினத்தின் அடிப்படையில் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
மெக்சிகோவில் குற்றவாளிக் குழுக்களுக்கு இடையிலான தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில் ஜலிஸ்கோ மாநிலத்தில் பெண் டிக்டாக் பிரபலம் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது அந்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஜலிஸ்கோவில் நியூ ஜெனரேஷன் ஜலிஸ்கோ கார்டல் எனும் குழு மிகவும் ஆதிக்கம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, அதே பகுதியிலுள்ள உணவகத்தில் மெக்சிகோவின் பிஆர்ஐ கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியான லூயிஸ் அர்மாண்டோ கார்டோவா டையஸ் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சில மணி நேரத்தில் வலேரியாவும் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.