;
Athirady Tamil News

ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!

0

ரஷியாவில் ஒரே இரவில் 280 டிரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷியா – உக்ரைன் போர் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது. இதனை முடிவுக்குக் கொண்டுவர முடங்கியிருந்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கும் விதமாக அமெரிக்காவில் உக்ரைன் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இணைந்து நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (மார்ச் 20) ஒரே இரவில் 280 டிரோன்கள் மூலம் ரஷியாவில் உக்ரைன் தாக்குதல் நடத்தியது. போர் தொடங்கியதிலிருந்து உக்ரைன் நடத்திய மிகப்பெரிய தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.

இதில், தெற்கு ரஸ்டவ் பகுதியில் 90 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல, ரஷிய தலைநகரான மாஸ்கோவில் 27 டிரோன்கள் வழிமறித்து தாக்கப்பட்டதாக மாஸ்கோ மேயர் செர்கெய் சோப்யானின் தனது சமூக வலைதளப் பதிவுகளில் குறிப்பிட்டிருந்தார்.இந்தத் தாக்குதலில், இருவர் காயமடைந்த நிலையில் பல்வேறு வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதுபற்றி, ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ள தகவலின்படி இதுவரை தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்ட உக்ரைனின் 283 டிரோன்கள் வழிமறித்து தாக்கி அழிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

ரஷியாவுடன் உக்ரைன் நடத்தவிருந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்தது. மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கவிருந்த நிலையில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.