;
Athirady Tamil News

போர் காரணமாக ஆப்கனில் 1.15 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

0

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 1.15 லட்சம் ஆப்கன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

தெஹ்ரீக்-ஏ-தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு தொடா்ந்து பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தி வந்தது. இந்த அமைப்பு ஆப்கனில் ஆட்சியில் உள்ள தலிபானின் கிளை அமைப்பாகும்.

இந்த அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆப்கன் அரசிடம் பாகிஸ்தான் தொடா்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால், தலிபான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், பயங்கரவாதிகளுக்கு தலிபான் அரசு அடைக்கலம் அளிப்பதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டிய நிலையில், பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் ராணுவப் படைகள் மாறிமாறி எல்லைதாண்டியத் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதனைத் தொடா்ந்து, ஆப்கனுடன் நேரடியாகப் போரில் ஈடுபட பாகிஸ்தான் முடிவெடுத்த நிலையில் இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக, ஆப்கனில் உள்ள நார்வீஜியன் அகதிகள் கவுன்சில் இயக்குநர் ஜேகபோ கரீதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் பிப்ரவரி மாதம் ஆப்கனில் உள்ள குனார் மற்றும் நங்கர்ஹர் மாகாணங்களில் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியது முதல் தற்போது வரை 76 ஆப்கன் மக்கள் பலியாகியுள்ளனர். 213 பேர் காயமடைந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, கடந்த மார்ச் 16 அன்று காபுலில் உள்ள மருத்துவமனையில் பாகிஸ்தான் நடத்தியத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நகர்ப்புறங்களில் தாக்குதல்கள் அதிகரிப்பது இந்தமோதல் தீவிரமடைவதைக் குறிக்கின்றது.

இதுவரை 800-க்கும் மேற்பட்டோரின் வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. இந்த சேதங்களிலிருந்து அவர்கள் மீளவே சில ஆண்டுகள் ஆகும்.இந்தப் போரின் காரணமாக இதுவரை ஆப்கனில் 1.15 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

மோதலில் ஈடுபடும் நாடுகள் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறாமல் இருக்க வேண்டும். பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் எப்போதும் தாக்குதலுக்கு இலக்காகக் கூடாது.

மேலும், உலகளவில் ஆப்கனுக்கு கிடைக்கும் உதவிகளும் மறுக்கப்பட்டு வருகின்றது. இதுவரை மிகக் குறைந்த அளவிலேயே உதவிகள் கிடைத்துள்ளன. மோதல்கள் நீடித்து வருவதால் அந்தக் குறைந்த அளவிலான உதவிகள் கூட கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உலகம் மோசமான சூழ்நிலையில் இருக்கும் இவ்வேளையில் ஆப்கன் மக்களை கைவிட்டுவிடக்கூடாது. உயர்ந்து வரும் உணவு விலைகளும் மூடப்பட்ட எல்லைகளும் ஏற்கனவே போரால் சிதைந்துள்ள மக்களை மேலும் மோசமான நிலைக்குத் தள்ளுகிறது” என்று அவர் தெரிவித்தார்.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு சவுதி அரேமியா, கத்தார், துருக்கி போன்ற நாடுகளின் வேண்டுகோளுக்கிணங்க தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாக சில நாள்களுக்குமுன் ஆப்கன் அறிவித்திருந்தது.

பாகிஸ்தானும் தங்களது ராணுவ நடவடிக்கைகளை ரமலான் காரணமாக இடைநிறுத்துவதாகக் கூறியிருந்தது. ஆனால், ஆப்கன் எல்லையில் தொடர்ந்து தனது தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தி வருவதாகவும் இந்தத் தாக்குதல்களில் பொதுமக்கள் பலர் பலியானதாகவும் ஆப்கன் பாதுகாப்புத் துறை குற்றச்சாட்டு வைத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.