;
Athirady Tamil News

தைவானை உலுக்கிய நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கையா?

0

தைவான் நாட்டின் கடற்கரை நகரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைவானின் ஹுவாலியன் நகரத்தில் நேற்று (ஜூன் 11) மாலை 4.30 மணியளவில், நிலப்பரப்பிலிருந்து சுமார் 31.1 கி.மீ. ஆழத்தில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆனால், அந்நாட்டில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியதாக தைவானின் மத்திய வானிலை அதிகாரம் கூறியுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் கடற்கரை நகரத்தின் அருகில் பதிவாகியுள்ளதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலநடுக்கம், அந்நாட்டிலுள்ள கட்டடங்களை சுமார் 1 நிமிடத்துக்கும் மேல் உலுக்கியதாகக் கூறப்படும் நிலையில், பாதிப்புகள் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

முன்னதாக, தைவான் நாடு, பசிபிக் பெருங்கடலின் ரிங் ஆஃப் ஃபையர் எனப்படும் டெக்டானிக் பிளவுக்கோடுகளின் மீது அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. இந்தப் பிளவுக்கோட்டின் மீதுள்ள நிலப்பகுதிகள் நிலநடுக்கம் அபாயமுள்ளவை எனக் கூறப்படுகிறது.

கடந்த 1999-ம் ஆண்டு தைவானில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், ஏராளமான கட்டடங்கள் இடிந்தன. மேலும், சுமார் 2,415 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.