;
Athirady Tamil News

தேனிலவு கொலை: திருமணத்துக்கு முன்பே திட்டம்; மனைவி வாக்குமூலம்!

0

தேனிலவில் வைத்து ராஜா ரகுவன்ஷியைக் கொலை முன்பே திட்டமிட்டதை அவரது மனைவி சோனம் ஒப்புக்கொண்டதாக மேகாலயா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொலைக்கான மூளையாக சோனத்தின் காதலன் ராஜ் குஷ்வாஹா செயல்பட்டதாகவும், சோனம் உடனிருந்து செயல்படுத்தியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

5 பேர் கைது!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி – சோனம் தம்பதியினர் திருமணமாகி 10 நாள்களில் மேகாலயாவுக்கு தேனிலவுக்குச் சென்றனர்.

அப்போது, சோனம் தனது காதலன் ராஜ் குஷ்வாஹா மற்றும் கூலிப்படையுடன் இணைந்து ராஜா ரகுவன்ஷியை மே 23 ஆம் தேதி கொலை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

ராஜ் குஷ்வாஹாவின் ஏற்பாட்டில், மேகாலயாவுக்குச் சென்ற கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேர் ராஜ் குஷ்வாஹாவை கொலை செய்துள்ளனர். சம்பவத்தின்போது சோனமும் உடன் இருந்துள்ளார்.

சோனம் ரகுவன்ஷியை உத்தர பிரதேசத்திலும் அவரது காதலர் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்தவர்களை மத்திய பிரதேசத்திலும் மேகாலயா போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மேகாலயா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று போலீஸ் காவலில் எடுத்து விசாரணையைத் தொடங்கினர்.

வாக்குமூலம்

இந்த நிலையில், ராஜா ரகுவன்ஷியைக் கொலை செய்ததாக அனைவரும் வாக்குமூலம் அளித்திருப்பதாக ஷில்லாங் காவல் கண்காணிப்பாளர் விவேக் சியம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது:

”அனைத்து குற்றவாளிகளும் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளனர். திருமணத்துக்கு முன்பே தேனிலவில் வைத்து கணவனைக் கொல்ல வேண்டும் என்ற சதி திட்டம் தீட்டியதை சோனம் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த கொலைக்கு ராஜ் மூளையாக செயல்பட்டுள்ளார், அவருடன் இணைந்து சோனம் திட்டத்தை அரங்கேற்றியுள்ளார். கொலையை செய்த மூவரும் நண்பர்கள், அவர்களில் ஒருவர் ராஜின் உறவினர்.

இந்தூரில், கடந்த பிப்ரவரி மாதம் முதலே ராஜா ரகுவன்ஷியை எப்படி கொலை செய்ய வேண்டும்? கொலைக்கு பிறகு சோனம் காணாமல் போனதுபோல் எப்படி நாடகமாட வேண்டும்? போன்ற திட்டங்களை தீட்டியுள்ளனர். ஆனால், அவர்களால் திட்டத்தை முழுமையாக அரங்கேற்ற முடியாமல் போனது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.