;
Athirady Tamil News

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 70 பேர் பலி

0

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்ததாகவும், 320 பேர் காயடைந்துள்ளதாகவும் ஈரான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இதனால், மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இஸ்ரேல் , ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. அதேவேளை, அணு ஆயுதத்தை உருவாக்க ஈரான் முயற்சித்து வருகிறது.

ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கினால் தங்கள் நாட்டிற்கு பேராபத்து என்று இஸ்ரேல் கருதுகிறது. இதனால், ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு நடவடிக்கையை தடுக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது.

இதனிடையே, அணு ஆயுத தயாரிப்பை கைவிடும்படி ஈரானிடம், அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

அதேவேளை, அணு ஆயுத தயாரிப்பிற்கான முக்கிய மூலக்கூறான யுரேனியம் செறிவூட்டலை ஈரான் அதிகரித்தது. தற்போதைய நிலவரப்படி 15 அணு ஆயுதங்களை தயாரிக்கும் அளவிற்கு ஈரான் யுரேனியம் செறிவூட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் இன்று அதிகாலை ஈரானின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியது.

ஈரானின் அணு உலை, அணு ஆராய்ச்சி அமையங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் பாதுகாப்புப்படை தளபதிகள், ஈரான் அணு விஞ்ஞானிகள் பலர் உயிரிழந்தாகவும் தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.