;
Athirady Tamil News

ஜார்க்கண்ட் கனமழையால் ஒடிசாவில் வெள்ளம்! 50,000 பேர் பாதிப்பு!

0

ஜார்க்கண்டில் பெய்து வரும் கனமழையால், ஒடிசா மாநிலத்திலுள்ள ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், ஒடிசாவின் சுபர்நரேகா ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், பாலாசோர் மாவட்டத்திலுள்ள ஏராளமான கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தேவைப்பட்டால் அருகிலுள்ள நிவாரண முகாம்களுக்குச் செல்ல தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாலாசோர் மாவட்ட ஆட்சியர் சூரியவன்ஷி மயூர் விகாஸ், அம்மாவட்டத்தின் தாசில்தார்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அவசரகாலத்தில் மக்களை வெளியேற்ற தயார்நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தேவையான மருத்துவ வசதிகளையும் சேகரித்து வைக்குமாறும், சாந்தில் அணையின் நீர்மட்டத்தைத் தொடர்ந்து கண்காணிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்துடன், ஜார்க்கண்டில் தற்போது மழையின் அளவு குறைந்து வருவதால், ஆற்றின் வெள்ளம் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ஜார்க்கண்டின் சாந்தில் அணை நிரம்பி திடீரென தண்ணீர் திறக்கப்பட்டதாலே, பாலாசோரின் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.