முன்பே வெளியேறிவிட்டோம்: அமெரிக்க தாக்குதல் குறித்து ஈரான்!

அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்க நடத்திய தாக்குதலுக்கு முன்னரே நாங்கள் பாதுகாப்பாக வெளியேறிவிட்டோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கிடையே 8 நாள்களுக்கு மேலாக போர் நிலவி வரும் நிலையில், நேற்று முன்தினம் (ஜூன் 21) ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹானில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியாகவும் போர் விமானங்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று அறிவித்தார்.
”ஈரானின் அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்படும் என்று நான் உங்களுக்கு உறுதியளித்தேன். இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது” என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் தெரிவித்தார்.
இந்நிலையில், அணுசக்தி நிலையங்களை குறிவைத்து நடத்திய தாக்குதலுக்கு முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேறி விட்டோம். அணுசக்தி நிலையங்களில் ஏதும் இல்லை, அங்கிருந்ததை பாதுகாப்பாக அகற்றி விட்டோம். இதனால் மிகப்பெரிய சேதத்தை சந்திக்கவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் அணுசக்தி பாதுகாப்பு அமைப்பு மையத்தின் தலைவர் கூறுகையில், அணுசக்தி நிலையங்கள் மீது குறிவைத்து நடந்த தாக்குதலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக, அணுசக்தி நிலையங்களில் எவ்வித கதிர்வீச்சு கசிவு, கதிரியக்க மாசுபாடு ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.
அமெரிக்க தாக்குதல்களுக்குப் பிறகு வளைகுடா பிராந்தியத்தில் “எந்த கதிரியக்க கசிவும் கண்டறியப்படவில்லை” என்று செளதி ஒழுங்குமுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.