சிந்து நதிநீரை ராஜஸ்தானுக்கு திருப்ப புதிய கால்வாய் கட்டப்படும்: அமித் ஷா

பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீரை ராஜஸ்தானுக்கு திருப்ப புதிய கால்வாய் கட்டப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா – பாகிஸ்தான் இடையே நெடுங்காலமாக உடன்பாட்டிலிருந்து வந்த சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. இதனால் இந்திய எல்லையைக் கடந்து பாகிஸ்தானுக்கு பாயும் பெருமளவு நதிநீர் தடைபட்டுள்ளது.
இந்தநிலையில், சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தற்காலிகமான நடவடிக்கையா அல்லது நிரந்தரமானதா என்று அமித் ஷா விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சனிக்கிழமை அளித்துள்ள பேட்டியில் பேசியதாவது: “சிந்து நதிநீர் இனி ஒருபோதும் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படாது. பாகிஸ்தானுக்கு செல்லும் நதிநீரை கால்வாய் கட்டி ராஜஸ்தானுக்கு திருப்பி விடுவோம். இதனால் தண்ணீரின்றி தவிக்கும் நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்படும்” என்றார்.