;
Athirady Tamil News

காரைதீவு பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசமானது

0
video link-

காரைதீவு பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியை சேர்ந்த உறுப்பினர் சுப்ரமணியம் பாஸ்கரனும் உப தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் முஹம்மது ஹனீபா முகம்மது இஸ்மாயீலும் தெரிவாகினர்

அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபையின் புதிய தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவிக்கு தெரிவு செய்வதற்கான கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ. எல். எம். அஸ்மி மற்றும் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கமல் நெத்மினி ஆகியோர் தலைமையில் சபை மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது.

புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த 11 உறுப்பினர்கள் கூட்ட மண்டபத்தில் சமூகமளித்திருந்தனர்.அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் 04 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 02 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் 01 தேசிய மக்கள் கட்சி சார்பில் 03 சுயேட்சைக்கழு 01 என 11 பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதன்போது உள்ளுராட்சி ஆணையாளர் புதிய தவிசாளருக்கான முன்மொழிவுகளை கோரினார்.

இந்நிலையில் இருவர் புதிய தவிசாளர் தெரிவிற்காக சபையில் உறுப்பினர்களினால் பிரேரிக்கப்பட்டனர்.இதனை அடுத்து பகிரங்க வாக்கெடுப்பா அல்லது இரகசிய வாக்கெடுப்பா என சபையில் விடப்பட்டது. இதன் போது பெரும்பாலான உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்பினை கோரினர்.இதற்கமைய உறுப்பினர்களால் பிரேரிக்கப்பட்டு வழிமொழியப்பட்ட இரண்டு புதிய தவிசாளர் தெரிவு உறுப்பினர்களும் பகிரங்க வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏனைய உறுப்பினர்களால் புதிய தவிசாளராக தெரிவு செய்ய கோரப்பட்டது.

இதன்போது காரைதீவு பிரதேச சபையின் புதிய தவிசாளரை சபையின் 11 உறுப்பினர்களில் தமிழ் அரசுக் கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சுயேட்சைக் குழு உறுப்பினர் ஒருவர் உள்ளடங்கலாக பிரதிநிதிகள் ஆதரித்தனர். தமிழ் அரசுக் கட்சி சார்பில் புதிய தவிசாளராக போட்டியிட்ட சுப்ரமணியம் பாஸ்கரன் என்பவர் 8 ஆசனங்களை பெற்று காரைதீவு பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவானார்.எதிராக போட்டியிட்ட தேசிய மக்கள் கட்சி சார்பில் மற்றுமொரு தவிசாளர் வேட்பாளரான கிறிஸ்ணபிள்ளை செல்வராணி என்பவர் 02 ஆசனங்களை பெற்ற நிலையில் 06 மேலதிக வாக்குகளால் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சுப்ரமணியம் பாஸ்கரன் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி ஆணையாளர் உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.

இதன்போது நடைபெற்ற பகிரங்க வாக்கெடுப்பின் போது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒரவர் நடுநிலை வகித்ததுடன் தமிழ் அரசுக் கட்சி சார்பில் முன்மொழியப்பட்ட உறுப்பினர் சுப்ரமணியம் பாஸ்கரன் என்பருக்கு 08 வாக்குகளும் ஏனைய தரப்பினரால் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தி சார்பில் முன்மொழியப்பட்ட கிறிஸ்ணபிள்ளை செல்வராணி என்பருக்கு 02 வாக்குகளும் கிடைக்கப்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் கூட்டத்தின் தொடர்ச்சியாக உப தவிசாளர் தெரிவு நடைபெற்றதுடன் உப தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் முஹம்மது ஹனீபா முகம்மது இஸ்மாயீல் தெரிவு செய்யப்பட்டார்.ஏனைய தரப்பில் இருந்து போட்டிக்கு யாரும் முன்வராதமையால் சபையில் ஏகமனதாக முஹம்மது ஹனீபா முகம்மது இஸ்மாயீலை உப தவிசாளராக தெரிவானார்.

இந்த நிகழ்வில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

புதிய தவிசாளர் தெரிவினை முன்னிட்டு காரைதீவு பிரதேச சபையை சுற்றி பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதனை அவதானிக்க முடிந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.