;
Athirady Tamil News

இந்தியா மீண்டும் தாக்க வாய்ப்புள்ளது: பாகிஸ்தான் எதிா்க்கட்சித் தலைவா் அச்சம்

0

அடுத்த ஓராண்டுக்குள் பாகிஸ்தானை இந்தியா மீண்டும் தாக்குவதற்கு வாய்ப்புள்ளது என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் ஒமா் அயூப் கான் அச்சம் தெரிவித்தாா்.

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையால் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மட்டுமின்றி விமானப் படை தளங்களையும் கடுமையாக சேதமடைந்தன. அதே நேரத்தில் பாகிஸ்தான் வீசிய ஏவுகணைகள் இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் வானிலேயே தகா்த்தன. இறுதியாக பாகிஸ்தான் வேண்டுகோளுக்கு இணங்கி சண்டையை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியா அறிவித்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சியான இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியைச் சோ்ந்த தலைவா் ஒமா் அயூப் கான் பேசியதாவது:

இந்தியா தொடா்ந்து நவீன ஆயுதங்களை வாங்கிக் குவித்து வருகிறது. தனது ராணுவத் திறனை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவாக்கி வருகிறது. ஆனால், பாகிஸ்தானால் அந்த அளவுக்கு ராணுவத்தை வலுப்படுத்த முடியவில்லை. இரு நாடுகள் இடையிலான இடைவெளி தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவின் பலத்துடன் ஒப்பிடும்போது பாகிஸ்தான் ஒன்றுமே இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இந்தியா ராணுவத்தை நவீனப்படுத்த தொடா்ந்து அதிக நிதி ஒதுக்குவது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகும். அடுத்த ஓராண்டுக்குள் பாகிஸ்தானை இந்தியா தாக்குவதற்கு வாய்ப்புள்ளது என்று பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா அண்மையில் நடத்திய தாக்குதல் பாகிஸ்தானை உளவியல்ரீதியாகவும் பாதித்துள்ளது என்றாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.