சீனாவின் தலையீடு இல்லாமல் அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்ய அமெரிக்கா ஆதரவு!
அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்வதில் சீனாவின் தலையீடு இருக்கக்கூடாது என்று திபெத் மக்கள் விரும்புகிறார்கள். இதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘தலாய் லாமா மரபு என்னுடைய மறைவுக்குப் பிறகும் தொடரும். அடுத்த தலாய் லாமாவை காடேன் போட்ராங் அறக்கட்டளை தோ்வு செய்யும்’ என்று 14-ஆவது தலாய் லாமா கடந்த புதன்கிழமை கூறியிருந்தார்.
இந்தநிலையில், திபெத்திய பௌத்த மதத்தின் தலைவராகக் கருதப்படும் தலாய் லாமா ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 6) தனது 90-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறாா். இதையொட்டி, அமெரிக்க அரசு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ‘திபெத் மக்களின் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதில் அமெரிக்கா தீர்க்கமாக கடமைபட்டுள்ளது. திபெத்தியர்களின் மொழி, கலாசாரம், எவ்வித தலையீடுமின்றி தங்களுடைய மத தலைவரைத் தேர்ந்தெடுத்தல் உள்ளிட்ட மத பாரம்பரிய நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கிறது.
தலாய் லாமா ஒற்றுமை, அமைதி, கருணை அகியவற்றை மக்களிடையே வெளிக்காட்டி மக்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.