;
Athirady Tamil News

ஒருதலை காதல்; குருவிட்ட யுவதி கொலையில் சிறுவன் அதிர்ச்சி வாக்குமூலம்!

0

இரத்தினபுரியில் குருவிட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெவிபஹல – தொடன்எல்ல வீதியில் கடந்த புதன்கிழமை (02) மாலை கழுத்து வெட்டப்பட்டு யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்கள் வெளியிட்டுள்ளனர்.

குருவிட்ட, தெவிபஹல – தொடன்எல்ல வீதியில் கடந்த புதன்கிழமை (02) மாலை இனந்தெரியாத நபரொருவர் யுவதி ஒருவரின் கழுத்தை வெட்டி அவரது கழுத்தில் இருந்த தங்க மாலையை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சிறுவனிடம் விசாரணை
காயமடைந்த குருவிட்ட – தெவிபஹல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது யுவதி இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கடந்த வியாழக்கிழமை (03) 17 வயது சிறுவன் ஒருவனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், யுவதியின் கழுத்தை வெட்டி தங்க மாலையை கொள்ளையிட்டுச் சென்ற நபர் குறித்த சிறுவன் என தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், சிறுவன் கொலைசெய்யப்பட்ட யுவதியை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ள நிலையில் அதற்கு அந்த யுவதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

சம்பவத்தன்று யுவதி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் சிறுவன், யுவதியை வழிமறித்து தன்னை காதலிக்குமாறு கோரியுள்ளார். ஆனால் யுவதி மீண்டும் மறுப்பு தெரிவித்ததால் சிறுவனுக்கும் யுவதிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறின் போது சிறுவன், யுவதியின் கழுத்தை வெட்டி அவரது தங்க மாலையை கொள்ளையிட்டுச் சென்றதாக பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை (04) இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சிறுவனின் ஒருதலை காதலால் யுவதி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.