;
Athirady Tamil News

புதைந்தும் உயிருடன் போராட்டம்! இரக்கமில்லா இஸ்ரேல்; கண்ணீருடன் காஸா!

0

காஸாவில் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழப்போருக்கு உதவி செய்ய முடியவில்லை என்று மீட்புக் குழுவினரும் துயரம் தெரிவிப்பதுதான் பெருந்துயரமாகக் கொள்ளப்படுகிறது.

பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் தாக்குதல் நடத்தி அங்குள்ள 251 பேரைப் பணயக் கைதிகளாக கைது செய்ததில் இருந்து அங்கு போா் நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் மடிந்து வருகின்றனர்.

போரில் மட்டுமின்றி உணவுப் பற்றாக்குறை, மருத்துவ உதவியின்மை, நிவாரண உதவியின்மை ஆகிய காரணங்களாலும் காஸா மக்கள் பலியாகின்றனர்.

இந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலால் தரைமட்டமாகும் கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களைக் காப்பாற்றக்கூட உதவியற்ற நிலையில் இருப்பதாக காஸா மக்கள் துயரம் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பான விடியோவில் ஒருவர் கூறுகையில், “கட்டட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக் கொண்ட இப்ராஹிம், தன்னை மீட்பதற்காக தன்னிடமிருந்த செல்போன் மூலம் மீட்புப் படையினரை தொடர்புகொள்ள முயற்சித்தார். இடிபாடுகளுக்கு அடியில் தீயும் பற்றியெரிந்து கொண்டிருந்ததால், இடிபாடுகளின் நடுவே கடவுள் நீரை அனுப்பி தன்னைக் காப்பாற்றுவார் என்று கூறினார்.

ஆனால், உதவி எதுவும் பெறப்படவில்லை. நாங்கள் பாதுகாப்புப் படையினரை தொடர்புகொள்ள முயற்சித்தும் பலனில்லை. அவர்கள் அனைவரும் இஸ்ரேல் படைகளால் தடுத்து நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர்.

இடிபாடுகளுக்கு அடியில் பலரும் சிக்கிக் கொண்டுள்ளனர்; ஆனால், அவர்கள் உயிருடன்தான் இருந்தனர். அவர்களைக் காப்பாற்றும் வாய்ப்பும் இருந்தது. ஆனால், அடுத்தநாள் காலையில் இப்ராஹிம் உயிரிழந்தார்.

தீயில் கருகிய உடலைக்கூட எங்களால் மீட்க முடியவில்லை. 3 நாள்களாக தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உயிரிழந்தது இப்ராஹிம் ஒருவர் மட்டுமல்ல’’ என்று தெரிவித்தார். இந்த சம்பவத்தைக் கூறியது இப்ராஹிமின் சகோதரர்தான்.

இஸ்ரேல் படைகள்தான், காஸாவுக்கு மீட்புக் குழு செல்வதைத் தடுப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் கூறுகையில், “எரிபொருள் நிலையங்களைக் குறிவைத்து, இஸ்ரேல் படை தாக்குதல் நடத்துகிறது. இதனாலேயே ஆபத்தில் உள்ளவர்களை மீட்க முடியாத நிலை ஏற்படுகிறது.

இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உதவிகேட்டு அழுகுரல் கேட்கும்போதும் உதவி செய்ய முடியாமல் மிகவும் கொடிய வலியை அனுபவிக்கிறோம்’’ என்று தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.