;
Athirady Tamil News

பாலஸ்தீனம் புதைக்கப்படுகிறது… மேற்கு கரையில் 3,400 வீடுகள் கட்ட அனுமதி: இஸ்ரேல்!

0

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையின் சர்ச்சை மிகுந்த பகுதியில், சுமார் 3,401 வீடுகளைக் கட்டுவதற்கு இஸ்ரேல் அரசு அனுமதியளித்துள்ளது.

சர்வதேச அளவில் வந்த எதிர்ப்புகளினால், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையின் ஈ1 (E1) எனப்படும் பகுதியில், இஸ்ரேலியர்களுக்காக கட்டமைப்புகளைக் கட்டும் திட்டத்தை நீண்டகாலமாக இஸ்ரேல் அரசு நிறுத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், ஜெருசலேமின் அருகில் அமைந்துள்ள ஈ1 பகுதியில், 3,401 வீடுகளைக் கட்டுவதற்கு அனுமதியளித்துள்ளதாக, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான ஆளும் அரசின் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த ஆக்கிரமிப்பின் ஆதரவாளரும், அந்நாட்டின் நிதியமைச்சருமான பெசலெல் ஸ்மோட்ரிச் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, செய்தியாளர்களுடனான சந்திப்பில் நேற்று (ஆக.14) அவர் கூறியதாவது:

“ஈ1 பகுதியில் கட்டுமானங்கள் துவங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டதன் மூலம், பாலஸ்தீனம் தனி நாடு எனும் திட்டம் புதைக்கப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மேற்கு கரையில் 4,030 வீடுகளைக் கட்டுவதற்கு 6 ஒப்பந்ததாரர்களுக்கு, இஸ்ரேலின் வீட்டுவசதி அமைச்சகம், நேற்று முன்தினம் (ஆக.13) அனுமதியளித்துள்ளதாக, உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, காஸாவிலுள்ள பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தவில்லை என்றால், பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்படும் என பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.