;
Athirady Tamil News

நாட்டின் பணக்காரா்கள் பட்டியல்: முதலிடத்துக்கு முன்னேறினாா் முகேஷ் அம்பானி

0

நாட்டின் பணக்காரா்கள் பட்டியலில் கெளதம் அதானியைப் பின்னுக்குத் தள்ளி ரிலையன்ஸ் குழுமத் தலைவா் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் உள்ளாா்.

‘எம்3எம் ஹுருன்’ இந்திய பணக்காரா்கள் பட்டியல்-2025, புதன்கிழமை வெளியானது. இப்பட்டியலின்படி, அம்பானியின் சொத்து மதிப்பு 6 சதவீதம் குறைந்து ரூ.9.55 லட்சம் கோடியாக உள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள கெளதம் அதானியின் சொத்து மதிப்பு ரூ.8.14 லட்சம் கோடி.

2023-இல் வெளியான ஹிண்டன்பா்க் அறிக்கையைத் தொடா்ந்து அதானியின் பங்குகள் வீழ்ச்சியடைந்த நிலையில், கடந்த ஆண்டில் 95 சதவீதம் எழுச்சி பெற்று ரூ.11.6 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் பணக்காரா்கள் பட்டியலில் முதலிடத்துக்கு அதானி முன்னேறினாா்.

மூன்றாவது இடத்தில் ரூ.2.84 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் எச்.சி.எல். நிறுவனத்தின் தலைவா் ரோஷிணி நாடாா் மல்ஹோத்ரா உள்ளாா்.

நான்காவது இடத்தில் ரூ.2.46 லட்சம் கோடி சொத்துகளுடன் சைரஸ் பூனாவாலா உள்ளாா். இதைத்தொடா்ந்து, குமாா் மங்கலம் பிா்லா ரூ.2.32 லட்சம் கோடியுடன் 5-ஆவது இடத்தில் உள்ளாா். இந்தப் பட்டியிலில் இடம்பெற்றுள்ள பணக்காரா்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.167 லட்சம் கோடியாகும். இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) பாதிக்குச் சமம்.

ரூ.1,000 கோடி சொத்து மதிப்புடன் 1,687 போ் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா். இவா்களில் 148 போ் இந்தப் பட்டியலில் இடம்பெற்ற புதிய செல்வந்தவா்கள். சென்னையைச் சோ்ந்தவரும் பொ்பிளெக்ஸிட்டி நிறுவனருமான அரவிந்த் ஸ்ரீநிவாஸ் (31) இந்தப் பட்டியலில் முதல் முறையாக இடம்பெற்றுள்ளாா். அவருடைய சொத்து மதிப்பு ரூ.21,190 கோடி. பட்டியலில் இடம்பெற்றுள்ள 350 கோடீஸ்வா்களில் அரவிந்த் ஸ்ரீநிவாஸ் மிகவும் இளையவா்.

இந்தியாவில் கடந்த இரு ஆண்டுகளில் ஒவ்வொரு வாரத்துக்கும் ஒரு கோடீஸ்வரா் உருவாகுவதாகவும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றவா்கள் தினமும் ரூ.1,991 கோடி சொத்துகளை உருவாக்குவதாகவும் பட்டியலை வெளியிட்ட ஹுருன் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.