;
Athirady Tamil News

மியான்மர் ராணுவத்தின் கொடூரத் தாக்குதல்! குழந்தைகள் உள்பட 40 பேர் பலி!

0

மியான்மர் புத்த மத பண்டிகையின்போது, அந்நாட்டின் ராணுவம் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், 80 -க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசு ஆட்சியைக் கலைத்து, கடந்த 2021-ம் ஆண்டு முதல் அந்நாட்டை ராணுவ அரசு ஆட்சி செய்து வருகின்றது. இதனால், ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், மத்திய மியான்மரின் சாங் யூ நகரில் புத்த மத திருவிழாவுக்காக நூற்றுக்கணக்கான மக்கள் திங்கள்கிழமை மாலை அப்பகுதியில் கூடியிருந்தனர்.

அப்போது, இரவு 7 மணியளவில் மியான்மர் ராணுவத்தினர் பாராகிளிட்டர் மூலம் வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், குழந்தைகள் உள்பட 40 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 80 -க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெடிகுண்டு தாக்குதல் நடக்க இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, கூட்டத்தில் இருந்த மூன்றில் ஒரு பங்கு மக்கள் அங்கிருந்து ஓடியதால் பலர் உயிர்தப்பியுள்ளனர்.

இந்த தாக்குதலில் சிதறிய உடல் பாகங்களை தற்போது வரை சேகரித்து வருவதாக அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.