;
Athirady Tamil News

உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க இஸ்ரேல் வீரர்களுக்குத் தடை!

0

இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டிகளில், இஸ்ரேல் நாட்டின் தடகள வீரர்கள் பங்கேற்பதற்கு அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டிகள், இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் வரும் அக்.19 ஆம் தேதி தொடங்குகின்றது. இந்தப் போட்டிகளில், சுமார் 86 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன.

இந்த நிலையில் இப்போட்டிகளில் பங்கேற்க, இஸ்ரேலிய தடகள வீரர்களுக்கு விசா வழங்கப்படாது எனவும், தங்களது நாட்டுக்குள் இஸ்ரேலிய அணிக்கு அனுமதியில்லை எனவும் இந்தோனேசியாவின் மூத்த சட்ட அமைச்சர் யுஸ்ரில் இஹ்சா மஹேந்திரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட விடியோ அறிக்கையில், காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து இந்தோனேசியா அதிபர் பிரபாவோ சுபியாந்தோ ஐ.நா. பொது அவையில் பேசியதையும் குறிப்பிட்டுள்ளார்.

இத்துடன், 6 இஸ்ரேலிய தடகள வீரர்களுக்கு விசா வழங்கக் கோரி இந்தோனேசிய ஜிம்னாஸ்டிக் கூட்டமைப்பு, சமர்பித்த கடிதத்தையும், அந்த அமைப்பு திரும்பப் பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்து இந்தோனேசியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், அந்நாட்டின் விளையாட்டு அணியை உலக நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.